பா.ஜ.க.வின் ஆன்மீக மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவின் மாநில செயலாளர் வினோத் ராகேந்திரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் உள்ளிட்ட 8 அரசு அதிகாரிகள் ஜூலை 10 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் கிராமத்தில் தேவநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 3.40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்தில் அமைந்து உள்ள தனியார் பள்ளியை (புனித ஜோசப் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி) அப்புறப்படுத்தக் கோரி, பாஜகவின் ஆன்மீக மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவின் மாநில செயலாளர் வினோத் ராகேந்திரன் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பள்ளியை அப்புறப்படுத்தி, கோயில் நிலத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கடந்த 2024ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி, தமிழக வருவாய் துறை செயலாளர் அமுதா, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் மதுமதி, இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், அறநிலைய துறை இணை ஆணையர் பரணிதரன், கோயில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக வினோத் ராகவேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.
அதில், “நீதிமன்றம் உத்தரவிட்டும் கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற, மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து புகார் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர் ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு, 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை ஜூலை 10 ஆம் தேதி நேரில் ஆஜராகி உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.