மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு ஞானபீடம், சாகித்ய அகாடமி, தேசிய, மாநில மற்றும் சர்வதேச அளவில் இலக்கிய விருதுகள் பெற்றவர்களுக்கு, 'கனவு இல்லம்' என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, "கல்மரம்" என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருதுபெற்ற தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி திலகவதிக்கு, சென்னை அண்ணா நகரில் 1,409 சதுர அடி வீடு கடந்த 2022-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. ஆனால், ஏற்கெனவே தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளதாகக் கூறி, கனவு இல்லம் திட்டத்தின்கீழ் திலகவதிக்கு வீடு ஒதுக்கீட்டை தமிழக அரசு 2024-ம் ஆண்டு ரத்து செய்துவிட்டது.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை வேறு எவருக்கும் ஒதுக்கக்கூடாது என்று கோரியும் திலகவதி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவில், “சொந்தமாக வீடு இருந்தாலும், கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு பெற, எழுத்தாளர்களுக்கு தகுதி உண்டு என 2022-ம் ஆண்டு அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதை மாற்றி, வீட்டுவசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள், கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெற தகுதி இல்லை என, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு, பத்திரப்பதிவுக்காக காத்திருந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து எனக்கு ஒதுக்கீடு செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும். ஏற்கெனவே வீடு சொந்தமாக வைத்திருக்கும் சுந்தரமூர்த்தி, எஸ்.ராமகிருஷ்ணன், மா.ராஜேந்திரன் ஆகியோருக்கு கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று திலகவதி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும் எழுத்தாளருமான திலகவதி சார்பில் மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ் ஆஜரானார். அவர். “அரசாணைகளில் முரண்பாடு உள்ளது. தமிழ் ஆர்வலர்களை கவுரவிக்கும் வகையில் அரசால் வழங்கப்படும் கனவு இல்ல திட்டத்தின் நோக்கம் சிதைந்துவிடக் கூடாது” என்று வாதிட்டார்.
இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் பிப்ரவரி 11-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கும் வீட்டு வசதி வாரியத்திற்கு உத்தரவிட்டார். அதுவரை, ஏற்கனவே திலகவதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டை வேறு எவருக்கும் ஒதுக்கீடு செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.