நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கிய ஏழு நாட்களில், கைதிகள் சிறைகளில் இருந்து விடுதலையாவதை உறுதி செய்ய வேண்டும் என்று சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழம உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 800-க்கும் மேற்பட்டவர்கள், ஜாமீன் கிடைத்தும், பிணைத்தொகை செலுத்த முடியாமல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக, டி.டி நெக்ஸ்ட் ஆங்கில செய்திடதவெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முனியப்பராஜ், தமிழ்நாடு முழுவதும் 153 விசாரணைக் கைதிகள், 22 தண்டனைக் கைதிகள், ஜாமீன் கிடைத்தும் பிணை செலுத்த முடியாததால் சிறையில் இருந்து வெளியே வர இயலவில்லை என்று தெரிவித்தார். மேலும், மாவட்ட நீதிமன்றங்களில் இருந்து ஜாமீன் உத்தரவுகள் சிறைகளுக்கு தாமதமாக அனுப்பப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசு திட்டத்தை பின்பற்றி, ஏழை கைதிகளுக்கு நிதி உதவி வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முனியப்பராஜ் குறிப்பிட்டார்.
இதையடுத்து, ஜாமீன் வழங்கிய 7 நாட்களில் கைதிகள் சிறையில் இருந்து விடுதலையாவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், அதற்கு தேவையான நடவடிக்கைகளை சட்டப் பணிகள் ஆணைக்குழு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் 800க்கும் மேற்பட்ட கைதிகள், ஜாமீன் கிடைத்தும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கைதிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் சேகரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவர்களை விடுதலை செய்ய என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரசு உதவித் திட்டம் மூலம் பயனடைந்த கைதிகளின் விவரங்களை சமர்ப்பிக்கும்படி தமிழக அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietami"