Advertisment

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்; உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்து வெள்ளிக்கிழமை உத்தரவு - ஐகோர்ட்

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்; 47 இடங்களில் அனுமதி வழங்குவது தொடர்பாக, உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்து, வரும் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் – சென்னை உயர் நீதிமன்றம்

author-image
WebDesk
New Update
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்; உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்து வெள்ளிக்கிழமை உத்தரவு - ஐகோர்ட்

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்காத இடங்களில் உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்து வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. காவல்துறை அனுமதி வழங்க மறுத்ததையடுத்து, காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், நவம்பர் 6ஆம் தேதியன்று ஊர்வலத்தை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட்டது. மேலும் ஊர்வலத்திற்கான நிபந்தனைகளை விதித்து, அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள்: ராஜராஜசோழன் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் – மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

ஆனால் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறி, காவல்துறைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் இன்று, உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆர்.எஸ்.எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், கடலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற எந்த இடத்திலும் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அனுமதி அளித்த உத்தரவை செயல்படுத்தாமல் உளவுத்துறை அறிக்கையை காரணம் காட்டி தமிழக அரசு தவிர்க்க பார்க்கிறது. வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை அவமதித்துள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாப்பதுதான் அரசின் கடமை. அமைதியான ஊர்வலத்தை யாராலும் தடுக்க முடியாது, அது ஜனநாயக உரிமை என்று வாதிட்டார்.

ஆர்.எஸ்.எஸ் சார்பில் மற்றொரு மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, தமிழகம் அமைதி பூங்கா என சொல்லிவிட்டு, ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கேட்டால் மட்டுமே சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.

மேலும் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜராகி, நீதிமன்றம் அனுமதி வழங்கும்படி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது நீதிபதி குறுக்கிட்டு மற்ற இடங்களில் ஏன் அனுமதி வழங்கவில்லை என காவல்துறை தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, காவல்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஆர்.எஸ்.எஸ் அனுமதி கோரிய இடங்களில், செப்டம்பர் 30 ஆம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குப் பிறகு வேறு மாதிரியான சூழல் நிலவுகிறது. அதைக் கருத்தில் கொண்டு 3 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 23 இடங்களில் உள்ளரங்கில் கூட்டமாக நடத்துவதாக இருந்தால் அனுமதி வழங்கத் தயார். ஆனால் மற்ற 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது என உறுதிபட தெரிவித்தார். மேலும், பல இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், வி.சி.க, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பொதுக்கூட்டம், மனித சங்கிலிக்கு அனுமதி கேட்டதாலேயே அனுமதிக்கப்பட்டது, அதேநேரம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணிக்கு அனுமதி கேட்பதால், அனுமதி வழங்க முடியாது. அதேநேரம், உள் அரங்கு கூட்டம் என்றால் அனுமதி வழங்குவதில் பிரச்சனை இல்லை. ஆர்.எஸ்.எஸ் மாநிலத்தின் பாதுக்காப்பு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும் காவல்துறை தரப்பு வழக்கறிஞர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அப்போது, கோவையை தவிர மற்ற இடங்களில் அனுமதி அளிக்க பரிசீலிக்கலாமே என நீதிபதி கேட்டார். இதற்கு, ​​மக்களின் பாதுகாப்பே முக்கியம். ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளின் வீடுகளுக்கே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தங்களது உயிரை துச்சமென நினைத்து, நேரத்தையும் தியாகம் செய்து தகவல்களை சேகரிக்கும் உளவுத்துறையினர் தரும் தகவல்களை எப்படி யூகம் அல்லது அனுமானம் என சொல்ல முடியும் என்று வழக்கறிஞர் இளங்கோ கேள்வி எழுப்பினார். அதன்பின்னர் உளவுத்துறையின் அறிக்கையை அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

ஆனால், உள்ளரங்கு கூட்டமாக நடத்த முடியாது, ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 47 இடங்களில் அனுமதி வழங்குவது தொடர்பாக, உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்து, வரும் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என வழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (நவம்பர் 4) தள்ளிவைத்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court Tamilnadu Rss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment