/tamil-ie/media/media_files/uploads/2022/10/Madras-HC-9.jpg)
பங்களாவில் மின் இணைப்பு துண்டிப்பு; ராஜேஷ் தாஸ் மனுவுக்கு பதிலளிக்க டான்ஜெட்கோ மற்றும் எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தையூர் பங்களாவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு பெண் எஸ். பி.க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸூக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும், விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி தீர்ப்பை உறுதி செய்தது. இந்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி, ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருப்பினும் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இதற்கிடையில் ராஜேஷ் தாஸிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவியும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான பீலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். அதோடு தாஸ் என்று தனது பெயரில் உள்ள இரண்டாம் பெயரை நீக்கி அவர் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தார்.
இந்தச் சூழலில் செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் உள்ள ராஜேஷ் தாஸின் பங்களா வீட்டின் மின் இணைப்பு கடந்த 20 ஆம் தேதி துண்டிக்கப்பட்டது. தையூரில் உள்ள பங்களாவின் மின் இணைப்பை துண்டிக்கும்படி செங்கல்பட்டு மின்வாரிய பொறியாளருக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் கடிதம் அனுப்பியிருந்தார். பீலா வெங்கடேசன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் பங்களாவின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதற்கு ராஜேஷ் தாஸ், கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எரிசக்தித்துறையில் உள்ள பீலா வெங்கடேசன், தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் ராஜேஷ் தாஸ் தரப்பு குற்றம் சாட்டியது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை பீலா தரப்பு முழுமையாக மறுத்துள்ளது.
இந்தநிலையில், பங்களாவுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க உத்தரவிடக் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். பீலா அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் தனது வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும், பீலா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், ராஜேஷ் தாஸ் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். இந்த மனுதொடர்பாக பதிலளிக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.