சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள என்.எஸ்.சி.போஸ் சாலையில் நடைபாதை வியாபாரம் நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது ஏன் என நவம்பர் 19 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி, 50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளை சரியாக பராமரிக்க உத்தரவிடக் கோரி சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த ஆடிட்டர் வந்தனா சக்காரியா சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், சென்னை மாநகராட்சி நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாலும், வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாலும், மின்சார பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாலும் பாதசாரிகள் பாதிப்புக்குள்ளாவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள என்.எஸ்.சி.போஸ் நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி, அறிக்கை தாக்கல் செய்ய நேற்று சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, என்.எஸ்.சி. போஸ் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாகவும், நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
என்.எஸ்.சி. போஸ் சாலையில் நடைபாதை வியாபாரம் நடத்த தடை விதிக்கப்பட்ட பகுதியாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பல முறை சென்னை உயர்நீதிமன்றமும் நடபாதை வியாபார ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளதாகவும் ஆனால் தற்போது வரை அந்த உத்தரவை அமல்படுத்தாதது ஏன் என்பது குறித்து வரும் 19 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர்.
மேலும், உயர்நீதிமன்றம் எதிரில் நடைபாதையில் உள்ள கோயிலில் உள்ள மின் இணைப்புகள் வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்தும் விளக்கம் அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நவம்பர் 19 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.