சமூக கருத்துக்களையும், மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி கர்நாடக இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் பிரபல பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மியூசிக் அகாடமி பெயரில் ஒவ்வொரு ஆண்டும், சிறந்த இசை கலைஞர்களுக்கு, எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் சங்கீத கலாநிதி வழங்கப்பட்டு வருகிறது. 1929-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் இந்த விருது கடந்த ஆண்டு பாம்பே ஜெயஸ்ரீக்கு வழஙகப்பட்ட நிலையில், 2024—ம் ஆண்டுக்கான விருதுக்கு பிரபல கர்நாடக இசைக்கலைஞரான டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1976-ம் ஆண்டு சென்னையில் பிறந்த டி.எம்.கிருஷ்ணா, தனது 12 வயதில் முதல் இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இசை நிகழ்ச்சி நடத்தி பல பாடல்களை பாடியுள்ள டி.எம்.கிருஷ்ணா, இசை குறித்து பல்வேறு புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் விரிவுரைகளை எழுதியுள்ளார். மத நல்லிணக்கத்தையும், சமூக கருத்தக்களையும் வலியுறுத்தும் வகையில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் டி.எம்.கிருஷ்ணா பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
இதனிடையே தற்போது எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில், சங்கீத கலாநிதி விருதுக்கு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் இந்த விருதினை டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என்று கூறி அவரது பேரன் சீனிவாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், கடந்த 2004-ம் ஆண்டு எனது பாட்டியின் மறைவுக்கு பிறகு, 2005-ம் ஆண்டு அவர நினைவை பேற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அவரது பெயரில் சங்கீத கலாநிதி விருதுமு் ரூ1 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்படுகிறது.
அதன்படி, 98-வது ஆண்டாக, வரும் டிசம்பர் மாதம் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனது பாட்டிக்கு எதிராக, இழிவான மற்றும் மோசமான கருத்துக்களை கூறியவர் டி.எம்.கிருஷ்ணா, கர்நாடக இசை உலகில் தன்னம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கிய ஒருவருக்கு, எனது பாட்டியின் பெயரில் விருது வழங்கி கவுரவிப்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த பெயரில் விருது அளிப்பதை தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மியூசிக் அகாடமியிடம் விளக்கம் கேட்ட நிலையில், விருது பெறுபவரை தேர்வு செய்வதில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. 2005-ம் ஆண்டு முதல், ஆங்கில நாளிதழ் குழுமம் தான் விருது பெறுபவர்களை தேர்வு செய்து வருகிறது. இதற்கு மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குடும்பத்தினரும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டது.
இதனையடுத்து தீர்ப்பு அளித்த நீதிபதி, 2024-ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க தடை விதித்து உத்தரவிட்டார். அதே சமயம் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரை பயன்படுத்தால் இந்த விருதை வழங்கலாம் என்றும், கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“