ஜெயலலிதா கைரேகை பிரச்னையில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை கண்காணிப்பாளர் ஆவணங்கள் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து அத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தோல்வியடைந்த மருத்துவர் சரவணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் தேர்தல் நடந்த நேரத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா, திருப்பரங்குன்றம் அ.தி.மு.க வேட்பாளர் ஏ.கே.போஸ்க்கு கட்சியின் வேட்பாளர் மற்றும் சின்னம் அகியவற்றை அங்கீகரித்து வழங்கும் பி படிவத்தின் வேட்புமனுவில் இடதுகை பெருவிரல் ரேகையை பதிவுசெய்து, அதை சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவர் பாலாஜி சான்றளித்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் வழக்கில் இந்த ஆவணம் மிக முக்கியமானது என்பதால், இந்த கைரேகையின் உன்மைத்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் இதனை ஏற்றது சட்டவிரோதமாக அறிவிக்க வேண்டும் என கூடுதல் மனு ஒன்றை சரவணன் தாக்கல் செய்தார்.
இந்த கூடுதல் மனு குறித்து ஏற்கனவே நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் அதிகாரி, ஜெயலலிதா கைரேகை சான்றளித்த மருத்துவ பாலாஜி ஆகியோர் சாட்சியம் அளித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி வேல்முருகன், கைரேகை தொடர்பான மனுவில், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில், சிறை சென்றார். அப்போது அவரின் கைரேகை பதிவு செய்யபட்டு இருக்கும். எனவே அந்த கைரேகை பதிவு செய்தது தொடர்பான ஆவணங்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை கண்காணிப்பாளர் தாக்கல் செய்ய வேண்டும்.
அதே போல் ஜெயலலிதா ஆதார் அட்டை எடுத்திருந்தால் அது தொடர்பான விபரங்களை ஆதார் தலைவர் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணை டிசம்பர் 8 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.