தமிழ்நாட்டில் சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ், ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாகவும், எழுத்துப்பிழை இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இசை வேளாளர் சாதி சான்றிதழ்களை ஆங்கிலத்தில் இசை வெள்ளாளர் என தவறான பெயரில் வழங்கப்பட்டு வருவதாகவும் அதை இசை வேளாளர் என்று குறிப்பிட வேண்டும் எனக் கோரி இசை வேளாளர் இளைஞர் கூட்டமைப்பின் நிறுவனர் குகேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மேலும், சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர்கள் தமிழ், ஆங்கிலத்தில் வேறு வேறாக இருக்க கூடாது என மனுதாரர் அவரது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
குகேஷ் தனது மனுவில், தன் மகளுக்கு சாதி சான்றிதழ் கோரி மாம்பலம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்த போது இசை வேளாளர் என்பதை இசை வெள்ளாளர் என குறிப்பிட்டு சாதி சான்று வழங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட பிரிவுகளுக்கான பட்டியலில் இருக்கும் இசை வேளாளர் பெயரை, இசை வெள்ளாளர் என மாற்றி சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருவது தொடர்பாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களுக்கான ஆணையத்திடம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ராஜசேகர் அமர்வில் இன்று (22.04.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சக்திவேல், “தமிழக அரசின் அரசாணையில் இசை வேளாளர் என்பதை ஆங்கிலத்தில் isaivellalar 'இசை வெள்ளாளர்' என இருப்பதால் அதனடிப்படையில் குறிப்பிட்டு சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
இதற்கு நீதிபதிகள், “இதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்?” என்று கேள்வி எழுப்பினர். இதற்கு மனுதாரர் தரப்பில், “பாதிப்பில்லை என்றாலும், ஒரு நபரின் சமூகத்தைக் குறிப்பிடும்போது எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும். சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர்கள் தமிழ், ஆங்கிலத்தில் வேறு வேறாக இருக்க கூடாது” என்று வாதிட்டார்.
இதையடுத்து, நீதிபதிகள், “சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் எழுத்து பிழைகள் இல்லாமல் ஒரே மாதிரி இருக்க வேண்டும்” என உத்தரவிட்டனர். மேலும், மனுதாரரின் மகளுக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகளை சரி செய்து கொடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.