உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுக கூட்டணி கட்சி எம்.பி க்களின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரிய மனுவை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த 17 ஆவது மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விழுப்புரத்தில் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரவிக்குமார், நாமக்கல் தொகுதியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் சின்னராஜ், ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் மதிமுகவின் கணேசமூர்த்தி மற்றும் பெரம்பலூரில் தொகுதியில் ஐ.ஜே.கே கட்சியின் தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நான்கு பேரின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரியும் அதிமுக சின்னத்தில் போட்டியிட கூட்டணி கட்சியினர் போட்டியிட்டதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தேர்தல் விதிகளின் படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர், அந்த கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதமானது. கட்சி உறுப்பினர்களாக இல்லாதவர்களை திமுக, அதிமுக வேட்பாளர்களாக அறிவித்து, பி படிவம் வழங்கியது சட்டவிரோதமானது. எனவும், இதுசம்பந்தமாக தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு உகந்தது தானா என்பது குறித்து நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு விசாரித்தது. மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், மனுவை விசாரணைக்கு பட்டியலிடும்படி உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.