/indian-express-tamil/media/media_files/2025/10/15/flags-chennai-high-court-2025-10-15-20-29-37.jpg)
அனுமதியின்றி தற்காலிகமாக கொடிக்கம்பம் வைத்தவர்களுக்கு எதிராக நடடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் பொது இடங்களில், மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சாலை ஓரங்களில் கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஏப்ரல் 28, 2025-க்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது.
இதனால், அரசியல் கட்சிகள் சார்பில் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, மண்டல மற்றும் மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து தமிழக அரசு ஒரு அரசாணைப் பிறப்பித்தது.
அதே போல, அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்காக கொடிக்கம்பங்கள் அமைக்கும்போதும், சாலைகள் மற்றும் தார் சாலைகளில் செண்டர் மீடியமில் கொடிகள் அமைக்கக்கூடாது, மேலும், 3 நாட்களுக்கு மேலாக கொடிக்கம்பங்கள் வைத்திருக்கக் கூடாது என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பான அரசாணையும் வழிகாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படுவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிபதி, அரசியல் கட்சி கூட்டங்களின்போது, சாலைகளில் சென்டர் மீடியம்களில் தற்காலிகமாக கொடிக் கம்பங்கள் அமைக்கப்படுகிறது. அனுமதியின்றி கொடிக் கம்பங்கள் வைப்பவர்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். அதே போல, சாலை ஓரங்களில் கொடிக் கம்பங்கள் வைக்க அனுமதி கேட்பவர்களிடம் ஒரு கொடிக்கு ரூ.1,000 வசூலிக்க வேண்டும். இது அரசுக்கு வருவாய் ஈட்டிக் கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பான விதிமுறைகளை அனைத்து துறை தலைவர்களுக்கும், தலைமைச் செயலருக்கும் டி.ஜி.பி-க்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதே போல, அனுமதியின்றி தற்காலிகமாக கொடிக்கம்பம் வைத்தவர்களுக்கு எதிராக நடடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 12-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.