/indian-express-tamil/media/media_files/2025/10/03/aadhav-arjuna-hc-2025-10-03-17-35-58.jpg)
இந்த விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனா ஏதோ புரட்சியை ஏற்படுத்துவது போல கருத்து பதிவிட்டுள்ளார். இதன் பின்புலத்தை விசாரித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கரூரில் விஜயின் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில், த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், “புரட்சி ஏற்படுத்துவது போல பதிவிட்டுள்ளார்; ஒரு சின்ன வார்த்தை பெரிய பிரச்னையை ஏற்படுத்திவிடும். இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா?” என்று சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக, கரூர் காவல்துறை த.வெ.க கரூர் மாவட்ட நிர்வாகிகள் மதியழகன், பவுன்குமார் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும், த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் மற்றும் வதந்தி பரப்பியதாக 25 பேர் பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு சென்னையில் செப்.30-ம் தேதி சைபர் கிரைம் போலீசாரல் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே, த.வெ.க தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில், இலங்கை, நேபாளம் போல இளைஞர்களின் புரட்சி நடக்க வேண்டும் என்று கலவரத்தை தூண்டும் வகையில் திங்கள்கிழமை இரவு எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். ஆதவ் அர்ஜுனாவின் பதிவுக்கு அதிக அளவில் கண்டனம் எழுந்த நிலையில், அவர் அந்தப் பதிவை அதிகாலையில் நீக்கிவிட்டார்.
இதையடுத்து, த.வெ.க-வின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் ஆர்ஜுனா மீது 5 பிரிவுகளின் கீழ் செவ்வாய்க்கிழமை சென்னை வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில், கரூரில் த.வெ.க தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (03.10.2025) சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரை நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் விசாரித்தார். அப்போது, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது நீதிபதி செந்தில்குமார் கடுமையான கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனா ஏதோ புரட்சியை ஏற்படுத்துவது போல கருத்து பதிவிட்டுள்ளார். இதன் பின்புலத்தை விசாரித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், “இது போல பொறுப்பற்ற பதிவுகளை காவல்துறை கவனத்துடன் விசாரித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறீர்களா? சின்ன வார்த்தை பெரிய பிரச்னையை ஏற்படுத்திவிடும். இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா?” எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.