ஒரே பாலின, திருநங்கையர் திருமணங்களுக்கு சட்ட அனுமதி வழங்கும் வகையில், பதிவாளர்களுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. LGBTQIA PLUS (எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ்) சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் திருநங்கையருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மாநில அரசு முடிவெடுக்க வேண்டும் எனவும், அதன் மூலம் ஒவ்வொரு முறையும் இடஒதுக்கீடு கோரி அவர்கள் நீதிமன்றக் கதவுகளைத் தட்ட வேண்டிய நிலை ஏற்படாது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், திருநங்கையர், ஒரே பாலின திருமணங்களை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. இருந்த போதிலும், அந்தத் திருமணங்களைப் பதிவு செய்யும் போது அவர்கள் பல சவால்களை சந்திப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி, ஒரே பாலின, திருநங்கையர் திருமணங்களை, இந்து திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இந்தத் திருமணங்களுக்கு சட்ட அனுமதி வழங்கும் வகையில், பதிவாளர்களுக்குத் தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுகள், LGBTQIA+ சமூகத்தினரின் உரிமைகளை பாதுகாக்கவும், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் குறைக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.