காலா படத்தை வெளியிடுவதற்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' திரைப்படத்தை வெளியிட தடை கேட்டு, சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம் காப்புரிமை சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, ராஜசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் காலா படத்திற்கு தடை விதிக்ககோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி சி.வி.கார்த்திகேயன், கரிகாலன் என்ற காலா தலைப்பு தன்னுடையது என்ற மனுதாரர் கூறுவதற்கு எந்த ஆதாரமும் அவரிடம் இல்லை. மேலும் படத்தின் கதை உள்ளடக்கிய விவரங்களை முறையாக பதிவு செய்யவில்லை. எனவே அனைத்து மொழிகளிலும் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்க முடியாது என்று கூறி கடந்த மாதம் 19 ஆம் தேதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ராஜசேகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் விடுமுறை கால சிறப்பு அமர்வு, நீதிமன்ற நீதிபதிகள் பார்த்திபன், ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தபோது, கரிகாலன் அடைமொழி இல்லாமல் படம் வெளியாவதில் ஆட்சேபனை இல்லை என ராஜசேகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், காலா படக்குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தலைப்பை பதிவு செய்துவிட்டு அதை புதுப்பிக்காமல் இருந்தால் அந்த தலைப்பை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காலா படத்தை வெளியிட தடைவிதிக்க முடியாது என்றும், விசாரணைக்காக வழக்கை படம் வெளியாகும் ஜூன் 7க்கு முன்பாக பட்டியலிட முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்து விட்டனர்.
ராஜசேகரின் மனு குறித்து நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ரஞ்சித், உண்டர்பார் பட நிறுவனம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வரும் ஜூன் மாதம் 14 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தனர்.