முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் பேசக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தி நீதிபதி இளந்திரையின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜனநாயகத்தில் ஆளும் கட்சி குறித்து விமர்சிக்க எதிர்க்கட்சிக்கு அதிகாரம் உள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதி இளந்திரையன் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை அரசியல்சாசனம் வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலான எந்த பேச்சையும் குற்றமாக எடுக்க முடியாது என்று நீதிபதி குறிப்பிட்டார். சி.வி. சண்முகம் பயன்படுத்திய வார்த்தை வேண்டுமானால் ரசிக்கக் கூடிய வகையில் இல்லாமல் இருக்கலாம், ஆனால், அவருடைய பேச்சை பொதுமக்கள் பார்வையில் இருந்து அணுக வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.
எதிர்க்கட்சி என்ற முறையில் பொறுப்புடன் பேச வேண்டும் எனவும் ஆனால், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசக்கூடாது என சி.வி. சண்முகத்துக்கு அறிவுறுத்திய நீதிபதி இளந்திரையன், சி.வி. சண்முகத்துக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.