தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகரித்து வருவதாக பெரும் குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது காவல் துறையினருக்கு தெரியுமா? தெரியாதா? என தமிழ்நாடு காவல் துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னையில் குடிசைவாசிகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணுரிமை இயக்கம், கடந்த 2017ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், குடிசைவாசிகளுக்கு பெரும்பாக்கம், மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில், மாற்று இடம் வழங்கப்படும் என்றும், அங்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பெரும்பாக்கம், துரைப்பாக்கம் பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து அய்வு செய்ய கடந்த 2018-ம் ஆண்டு ஒரு குழுவை அமைத்தது. இந்த குழு தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த அறிக்கையில், இந்த பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாகட்டம் அதிகமாக இருப்பதாகவும், பலருக்கும் இவைகள் தாரளமாக கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மாற்றம் நீதிபதி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆய்வு குழு கொடுத்த அறிக்கையில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தாராளமாக கிடைப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இங்கு போதை மறுவாழ்வு இல்லம் அமைக்க வேண்டும் என்று ஆய்வுக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் போதை பொருட்கள் தாராளமாக கிடைப்பது காவல்துறைக்கு தெரியுமா? தெரியாதா? பள்ளிக்குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். போதை பொருள் வழக்குகளை விசாரிக்க, தனி அமைப்பு ஏதேனும் உள்ளதா? இல்லையா? இந்த வழக்குகளை சுதந்திரமான ஒரு அமைப்பிடம் ஒப்படைக்கலாமா என்று காவல்துறை தரப்பின் வழக்கறிஞரிம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், போதைப்பொருள் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குற்றங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளன. இப்பகுதியில் ஏராளமான காவல்துறையினரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்று விளக்கம் அளித்தார். மேலும் ஆய்வுக்குழு அறிக்கை தொடர்பாக எடுக்கப்பட உள்ள நடவடிக்கைள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆய்வுக்குழு அறிக்கையை அமல்படுத்துவது தொடர்பாக அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இப்பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பாக, மாவட்ட சட்டப்பணிகள் ஆய்வுக்குழுவும், தாலுக்கா சட்ட பணிகள் ஆய்வுக்குழு நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை செப்டம்பர் 9-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“