/indian-express-tamil/media/media_files/2025/09/01/sp-velumani-hc-2-2025-09-01-19-55-51.jpg)
இந்த வழக்குகளின் நடைமுறை குறித்து கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும் ஏன் இவ்வளவு தாமதம் ஏற்படுகிறது என்று கேள்வி எழுப்பியது.
கடந்த 2016 - 2021 அ.தி.மு.க ஆட்சி காலத்தில் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், இந்த வழக்கில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில் டெண்டர் முறைகேடு தொடர்பாக கோவை மாநகராட்சி துணை ஆணையராக இருந்த காந்திமதி என்பவருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி அளித்து தமிழக அரசு ஆகஸ்ட் 30-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இரு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர் அரசு அனுமதி பெற வேண்டி உள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்குகளின் நடைமுறை குறித்து கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும் ஏன் இவ்வளவு தாமதம் ஏற்படுகிறது என்று கேள்வி எழுப்பியது. அதே சமயம், முன்னாள் அமைச்சர்கள் உட்பட அரசியல்வாதிகள் மீது நிலுவையில் உள்ள நிதி முறைகேடு தொடர்பான புகார்களை காவல்துறையினர் மிகுந்த பொறுப்புடன் கையாள வேண்டும் என்றும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.