நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் முதல் மனைவி நடிகை விஜயலட்சுமியா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக, கடந்த 2011-ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகியிருந்தார்.
இந்த சூழலில் தனக்கு எதிராக விஜயலட்சுமி பதிவு செய்த பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த முறை நடந்த போது, காவல்துறை சார்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், மனுவுக்கு விளக்கம் அளிக்குமாறு நடிகை விஜயலட்சுமிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில் சீமான் தாக்கல் செய்த மனு மீது இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, "2011-ஆம் ஆண்டு சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி அளித்த புகாரை அவரே வாபஸ் பெற்றுக் கொண்டார். 2023-ஆம் ஆண்டு கொடுத்த புகாரையும் அவர் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
அதன்படி, மற்றவருடைய தூண்டுதலின் பேரில் கொடுக்கப்பட்ட புகார் என்ற அடிப்படையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என சீமான் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால் காவல்துறை தரப்பில் இருந்து ஆஜரான வழக்கறிஞர், "கடந்த 2008-ஆம் ஆண்டு மதுரையில் உள்ள கோயிலில் சீமானும், விஜயலட்சுமியும் மாலை மாற்றிக் கொண்டனர்.
"2008-ஆம் ஆண்டு பலமுறை விஜயலட்சுமியை, சீமான் கட்டாயப்படுத்தியுள்ளார். திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி கொடுத்ததால் தான், 2 முறை சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி திரும்பப் பெற்றார். அதன்பேரில், இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது" எனக் கூறினார்.
இதைக் கேட்ட நீதிபதி, சீமானின் முதல் மனைவி விஜயலட்சுமியா? எனக் கேள்வி எழுப்பினார். மேலும், சீமானுக்கு எதிரான வழக்கில் 12 வாரங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது.