/indian-express-tamil/media/media_files/hRkHAjdu15oYxriRZdss.jpg)
மது விற்பனை செய்யும் அரசால் பட்டாசு கடைகள் அமைக்க முடியாதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தீபாவளியையொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடர்பான டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, சென்னை பட்டாசு முகவர்கள் நலச்சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த விசாரணையின் போது, "யாருக்கும் டெண்டர் வழங்கப்படவில்லை என கடந்த 15ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவித்த அரசு, 14ம் தேதியே டெண்டர் வழங்கப்பட்டு விட்டதாகவும், 10ம் தேதியே அதற்கான தொகை பெறப்பட்டுவிட்டதாகவும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக இணையதளத்தில் தகவல் பதிவிட்டுள்ளதாக" மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் வழக்கறிஞர் ரவீந்திரன், ஏற்கனவே டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டதாக கூறினார். இதைக் கேட்ட நீதிபதி, பின்னர் எதற்காக டெண்டர் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். மேலும், மதுபானம் விற்கும் அரசால் பட்டாசு கடைகள் அமைக்க முடியாதா எனவும் கேள்வி எழுப்பினார்.
இதைக் கேட்ட, கூடுதல் தலைமை வழக்கறிஞர், "காரணமில்லாமல் அரசை குறை கூற வேண்டாம். அவ்வாறு கூறினால் மௌனமாக இருக்க முடியாது" என பதிலளித்தார். தனி நபர்களுக்கு செல்லும் வருமானம் அரசுக்கு வர வேண்டும் என்ற நோக்கில் அவ்வாறு கூறியதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், இவ்வழக்கு தொடர்பாக சுற்றுலாத் துறை செயலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.