திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., இன்பதுரை வெற்றி எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை பொதுத் தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட திமுக வேட்பாளர் அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். போட்டியிட்ட இன்பதுரை, தி.மு.க. வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ., இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, தபால் வாக்குகள் தான் முதலில் எண்ணப்பட வேண்டும். தபால் வாக்குகள் எண்ணும்போது, இரு தரப்பிலும் சில ஆட்சேபணைகள் தெரிவிக்கப்பட்டன.
இதையடுத்து, அந்த வாக்குகள் எண்ணப்படவில்லை. பின்னர், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் எண்ணத் தொடங்கினர். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பிற தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கின. இவற்றில் அதிமுக, அதிக தொகுதிகளில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ராதாபுரம் தொகுதி தேர்தல் அதிகாரிகள், அதிமுக. வேட்பாளருக்கு சாதகமாக செயல்படத் தொடங்கினர். பிற்பகலில், தபால் வாக்குகளை எண்ணுமாறு தேர்தல் அதிகாரியிடம் நானும், கட்சி முகவர்களும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது துணை ராணுவப் படை, போலீஸார் எங்களை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றி விட்டனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் இருந்து எங்களை வெளியேற்றிய பின்னர், 19 முதல் 21 வரையிலான சுற்றுகள் எண்ணப்பட்டு, அதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இன்பதுரைக்கு அதிக வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் அதிகாரிகள் அறிவித்தனர்.
அதன் பின்னர், தபால் வாக்குகளில் எனக்கு சாதகமாக பதிவான 200 வாக்குகள் செல்லாது என்று அறிவித்தனர். இதையடுத்து, என்னை விட 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றிப் பெற்றதாக தொகுதி தேர்தல் அதிகாரி அறிவித்து விட்டார். வாக்கு எண்ணிக்கையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. எனவே, ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக. வேட்பாளர் இன்பதுரை வெற்றிப் பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். மேலும் வாக்கு எண்ணிக்கையின்போது தபால் வாக்குகளில் 203 தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் எண்ணாமல் நிராகரித்து விட்டதாகவும், அந்த வாக்குகளை எண்ண தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தன் மனுவில் கோரியிருந்தார்.
இந்த தேர்தல் வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை செய்யும் வகையில் அந்த தொகுதியின் பதிவான 19, 20 மற்றும் 21 ஆவது சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகளையும், பதிவான தபால் வாக்குகளையும் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி உயர் நீதிமன்ற தலைமைப்பதிவாளரிடம் ஒப்படைக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.