சென்னை – செங்கல்பட்டு – அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி மார்க்கங்களில் இயக்கப்படும் புறநகர் ரயில்களில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிங் வண்ண முதல் வகுப்பு பெட்டியை மாற்றி விட்டு, பழைய பெட்டிகளையே இயக்க ரயில்வேவுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை – செங்கல்பட்டு – அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி மார்க்கங்களில் இயக்கப்படும் புறநகர் ரயில்களில் முதல் வகுப்புக்கு, பிங் வண்ணத்தில் புதிய பெட்டிகளை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்தது. இந்த பெட்டிகளில் இருக்கை எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் கூறி, பழைய பெட்டிகளையே மீண்டும் இயக்க உத்தரவிடக் கோரி சென்னை பம்மலைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்திரசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை ஏற்று உத்தரவு பிறப்பிக்க இயலாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர். மேலும், நீதிமன்றங்களில் பொது நல வழக்குகள் நிரம்பி வழிவதாகவும், இந்த வழக்குகள் அரசு நிர்வாகத்தை நீதிமன்றமே ஏற்று நடத்தக் கோரும் வகையில் இருப்பதாகவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக் காட்டியுள்ளனர்.