/tamil-ie/media/media_files/uploads/2018/03/h.raja-bjp.jpg)
பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து; ஹெச்.ராஜா வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம் விசாரணையை சந்திக்க உத்தரவு
பெண்களுக்கு எதிராக ட்விட்டர் பக்கத்தில் ஆபாச கருத்து தெரிவித்த பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம் விசாரணையை சந்திக்க உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்து தெரிவித்ததாக பா.ஜ.க மூத்த நிர்வாகி ஹெச்.ராஜாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உட்பட தி.மு.க நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து, ஹெச்.ராஜா மீது பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல், பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் ஈரோடு டவுன் காவல்துறை வழக்கு பதிவு செய்தது
ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், இந்த வழக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை 3 மாதங்களில் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா? என நீதிபதி ஜி.ஜெயசந்திரன் கேள்வி எழுப்பினார். அதற்கு எச்.ராஜா தரப்பு, "ஆம்" என்று பதில் அளித்தது. எச்.ராஜா தரப்பு பதிலை தொடர்ந்து வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, விசாரணையை சந்திக்க அறிவுறுத்தி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.