தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் குறைந்த அளவிலேயே ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றா தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று (மே 24) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் தடுப்பூசி நடவடிக்கைகள் குறித்து அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. தமிழக அரசு சார்பில் சுகாதாரத் துறைச் செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில், கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், இந்திய அளவில் தமிழகத்தில் பலி எண்ணிக்கை குறைவாக பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அந்த அறிக்கையில், ஒடிசா மாநிலத்தில் இருந்து 146 டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், அவை முழுமையாகக் கிடைக்கவில்லை எனவும், 'யாஸ்' புயல் நெருங்கி வருவதால் ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2021 இறுதிக்குள் 216 கோடி டோஸ் உற்பத்தி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
இதனை குறித்துக்கொண்ட நீதிபதிகள், யாஸ் புயலால் ஒடிசாவில் இருந்து ஆக்ஸிஜன், விநியோகம் பாதிக்கும் என்பதால் மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தினர்.
மேலும், தமிழகத்துக்குக் குறைவான அளவிலேயே தடுப்பூசி டோஸ்கள் ஒதுக்கீடு செய்துள்ள மத்திய அரசின் நடவடிக்கை குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், நேரடியாகத் தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களில் இருந்து, மாநில அரசுகள் கொள்முதல் செய்ய இயலாத நிலை உருவாகியுள்ளதால், தமிழகத்துக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும் என, மத்திய அரசுக்கு அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, தடுப்பூசி தொடர்பாக மக்கள் மத்தியில் நிலவும் மூடநம்பிக்கைகளைக் களைந்து, தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மே 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"