மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களின் தற்போதைய மதிப்பை கண்டறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரிதுறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்க கோரி சென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் புகழேந்தி, ஜானகிராமன் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கில் தங்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டுமெனவும், அரசு நினைவிடமாக வேதா நிலையத்தை மாற்ற ஆட்சேபித்தும் தீபக், தீபா தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே, ஜெயலலிதாவின் நான்கு சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், 17 கோடி ரூபாய் அளவிற்கு வரிபாக்கி உள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது தீபா, தீபக் தரப்பில், ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு தாங்கள் வாரிசு என அறிவிக்கும்படியும் வருமான வரி பாக்கியை தாங்கள் கட்ட தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
புகழேந்தி தரப்பில், சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை மட்டுமே நியமிக்க வேண்டும். சொத்தாட்சியரின் பொறுப்பில் இருப்பதால் தீபா, திபக் அதற்கு வாரிசு உரிமை கோர முடியாது என தெரிவிக்கப்பட்டது.
அமலாக்க துறை தரப்பில், ஜெயலலிதா மீது எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் நினைவில்லாமாக மாற்ற உத்தரவிடப்பட்ட நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
சொத்துகளை தீபா, திபக் ஆகியோர் உரிமை கோர முடியாது என்றால் மக்களுக்கு கொடுப்பது தான் மனுதாரரின் விருப்பமா? என புகழேந்தி தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் எங்கெல்லாம் உள்ளது? அந்த சொத்துக்களின் தற்போதைய மதிப்பு என்ன? என்பது குறித்த முழு விவரங்களை வருமான வரிதுறை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவில்லாமாக மாற்றும் பணி தற்போது என்ன நிலையில் உள்ளன? என்பது தொடர்பாக தமிழக அரசு விளக்க அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 5 ஆம் தேதி தள்ளி வைத்தனர்.