சென்னை காஸ்மோபாலிட்டன் கிளப், தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கியை செலுத்தாத குற்றச்சாட்டில் ரூ.25 கோடி செலுத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் மாம்பலம் - கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில், 77.70 ஏக்கர் அரசு நிலத்தில், 1933-ல், அப்போதைய அரசாங்கம் 64.76 ஏக்கர் பரப்பளவில் கோல்ஃப் மைதானம் அமைப்பதற்கு கிளப்புக்கு ஆதரவாக மெட்ராஸ் மாகாண அரசாங்கம் உரிமம் வழங்கியது. பின்னர், 1956-ல் இந்த உரிமம் குத்தகையாக மாற்றப்பட்டு, 77.37 ஏக்கராக நிலத்தின் பரப்பு அதிகரிக்கப்பட்டு ஒரு ஏக்கருக்கு ஆண்டு வாடகையாக ரூ.15 நிர்ணயம் செய்தது.
இதில் காஸ்மோபாலிட்டன் கிளப் 1971-1996-ம் ஆண்டுகளுக்கு உரிய குத்தகை பணத்தைச் செலுத்தவில்லை எனக் கூறி, 119 கோடியே 78 லட்சத்து 58 ஆயிரத்து 312 ரூபாய் குத்தகை செலுத்த வேண்டும் என்று, மாம்பலம் - கிண்டி வட்டாட்சியர் 2004-ஆம் ஆண்டு காஸ்மோபாலிட்டன் கிளப்பிற்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நோட்டீசை எதிர்த்து காஸ்மோபாலிட்டன் கிளப் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் 2004-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 2015-ம் ஆண்டு மே 31-ம் தேதிக்குள்ளாக ரூ. 25 கோடியை தமிழக அரசுக்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். மேலும், காஸ்மோபாலிட்டன் குத்தகை வசூல் நடவடிக்கை தொடர்பான நோட்டீசில் உரிய விசாரணையை மேற்கொண்டு, உண்மையான குத்தகை பாக்கியை தீர்மானிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதையடுத்து, ரூ. 25 கோடி செலுத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, காஸ்மோபாலிட்டன் கிளப் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், குத்தகை நிர்ணயிக்க அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது எனவும், மாவட்ட ஆட்சியரோ மற்றும் வட்டாட்சியரோ நோட்டீஸ் அனுப்பவோ, குத்தகையை உயர்த்தவோ?அதிகாரம் இல்லை எனவும் கூறினர்.
மேலும், எதன் அடிப்படையில் காஸ்மோபாலிட்டன் கிளப் நிபந்தனை முன்னோடியாக ரூ.25 கோடி வழங்க வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டார். விரிவான விசாரணை நடத்தி உரிய காலத்துக்கான வாடகை நிலுவைத் தொகையை முடிவு செய்ய புதியதாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இது தெரியவில்லை என்று கூறிய நீதிபதி ஆர் சுரேஷ் குமார் மற்றும் நீதிபதி ஜி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
2009-ம் ஆண்டு அரசாணை (G.O) 33-ன் படி, நிர்ணயிக்கப்பட்ட குத்தகை வாடகையை அரசால் மட்டுமே திருத்த முடியும் என்று மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
குத்தகை வாடகையை நிர்ணயிப்பது அல்லது திருத்துவது என்பது அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டது, அதை நில நிர்வாக ஆணையர், மாவட்ட ஆட்சியர் அல்லது வட்டாட்சியர் போன்ற வருவாய்த் துறை அதிகாரிகள் என எந்த அதிகாரியாலும் நிரப்ப முடியாது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், 119 கோடியே 78 லட்சத்து 58 ஆயிரத்து 312 ரூபாய் குத்தகை செலுத்த வேண்டும் என்று மாம்பலம் - கிண்டி வட்டாட்சியர் 2004-ஆம் ஆண்டு காஸ்மோபாலிட்டன் கிளப்பிற்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்தும், தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“