நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பேச்சுகளுக்கு 100 வழக்குகளாவது தொடர்ந்திருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஆண்டு நவம்பரில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்து, நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும் ஆபாசமான வார்த்தைகளால் பேசியுள்ளார் என்று வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தமிழ்நாடு டி.ஜி.பி.-க்கு புகார் தெரிவித்தார். மேலும், இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, எழும்பூர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று (16.04.2025) விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், சீமான் பேசிய பேச்சுகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதாக இருந்தால் 100 வழக்குகளாவது தொடர்ந்திருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
மேலும், கடந்த 20 ஆண்டுகளாக அவரது பேச்சை கேட்கவில்லையா? இப்போதுதான் முதன்முறையாக கேட்கிறீர்களா? என்று நீதிபதி வேல் முருகன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மனுதாரர் தரப்பில் கூறுகையில், ஏற்கெனவே 4 வழக்குகள் தொடரப்பட்டு அவை எண்ணிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. சீமான் பேசிய பேச்சு பென்டிரைவில் நீதிபதியிடம் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, பென்டிரைவில் உள்ள சீமானின் பேச்சைக் கேட்ட பிறகு, உத்தரவு பிறப்பிப்பதாக கூறிய நீதிபதி வேல்முருகன் இந்த வழக்கு விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்தி வைத்தார்.