வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிவாரண நிதி பெற்றது தொடர்பான வழக்கில் மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதத்தை விதித்த கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
கடந்த 1997-ம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து அனுமதியின்றி சட்டவிரோதமாக ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் நிவாரண நிதி பெற்றதாக, மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா மீது எழும்பூரில் உள்ள சென்னை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே போல, இதில் ஜவாஹிருல்லாவுக்கு உடந்தையாக இருந்த ஹைதர் அலிக்கு 1 ஆண்டு சிறையும், எஸ் சையத் நிசார் அகமத், ஜிஎம் ஷேக் மற்றும் நல்ல முகமத் கலஞ்சிம் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஜவஹிருல்லா உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி வேல்முருகன் அமர்வு முன்பு நடைபெற்றது.
இந்நிலையில், இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் வெள்ளிக்கிழமை (14.03.2025) தீர்பளித்தார். அதில் ஜவாஹிருல்லாவுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10,000 அபராதம் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளார். மேலும், இந்த தீர்ப்பு குறித்து மனுதாரர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்ய தண்டனையை 1 மாதம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.