/indian-express-tamil/media/media_files/2025/06/10/OzBx4ygGdtTTLO5DwwDQ.jpg)
யூடியூபர் ‘சவுக்கு’ சங்கர் என்கிற ஏ. சங்கர், தூய்மை பணியாளர் திட்டங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அது குறித்து மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூன் 10) தள்ளுபடி செய்தது.
முன்னதாக இந்த பொதுநல மனு ஜூன் 11, 2025 அன்று நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய கோடைக்கால அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தனது மார்ச் 27, 2025 தேதியிட்ட புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய உத்தரவிடக் கோரியிருந்தார்.
சவுக்கு சங்கர் தனது மனுவில், "மத்திய அரசு, 'இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதார சுற்றுச்சூழல் தேசிய நடவடிக்கை' (NAMASTE - National Action for Mechanised Sanitation Ecosystem) திட்டத்தையும், தமிழக அரசு 'அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்கள் திட்டம்' (AABCS - Annal Ambedkar Business Champions Scheme) என்ற திட்டத்தையும் 2023 ஆம் ஆண்டில் மனிதக் கழிவுகளை அகற்றும் முறையை ஒழிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தின.
இந்த திட்டங்களின் முக்கிய நோக்கம், தானியங்கி ஜெட்டிங் மற்றும் உறிஞ்சும் இயந்திரங்கள் போன்ற இயந்திரமயமாக்கப்பட்ட தீர்வுகளை அறிமுகப்படுத்துவதாகும். அதாவது, மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களுக்கு சுகாதார பணிக்கான உபகரணங்களை வாங்குவதற்கு, மூலதன மானியங்கள் மற்றும் வட்டி குறைப்புடன் வங்கிக் கடன்களை வழங்குவதன் மூலம் இத்திட்டம் செயல்பட திட்டமிடப்பட்டது.
AABCS திட்டத்தின் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளின்படி, இந்தத் திட்டம் மாநில அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறையால், தொழில்துறை ஆணையர், தொழில்கள் மற்றும் வர்த்தக இயக்குநர் (ICDIC) மூலம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று" தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்த திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்புகள் சட்டவிரோதமாகவும், தன்னிச்சையாகவும் 'தலித் இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி' (DICCI) என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும், இது கோடிக்கணக்கான ரூபாய் நிதியை முறைகேடாக பயன்படுத்த வழிவகுத்துள்ளது என்றும் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டினார். இந்த தனியார் நிறுவனம், நிறுவனப் பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி (TNCC) தலைவர் கே. செல்வப்பெருந்தகை இந்த முறைகேடுகளில் முக்கிய பங்காற்றியதாக குற்றம் சாட்டிய சவுக்கு சங்கர், சுகாதார பணியாளர்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட பெரும் தொகையான பொதுப்பணம், இந்த சட்டவிரோத செயல்களால் உண்மையான பயனாளிகளைச் சென்றடையவில்லை என்று தெரிவித்தார்.
DICCI பரிந்துரைத்த பெரும்பாலான பயனாளிகள் காங்கிரஸ் கட்சியின் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் தொழில்முனைவோர் திட்டங்களின் கீழ் கடன் பெறுவதற்கு வறுமைக் கோட்டிற்கு கீழ் (BPL) உள்ளவர்கள் அல்ல என்றும் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டினார். மேலும், தனது யூடியூப் சேனலில் இந்த முறைகேடுகள் குறித்து தெரிவித்த பிறகு தனது வீடு சூறையாடப்பட்டது என்றும் சவுக்கு சங்கர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், திட்டத்தின் பலன்கள் உண்மையான தூய்மை பணியாளர்களுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினர். அதேசமயம், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடத் தேவையில்லை என்று கூறி, சவுக்கு சங்கரின் பொதுநல மனுவை தள்ளுபடி செய்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.