/tamil-ie/media/media_files/uploads/2018/09/8-ways-road.jpg)
8 ways road, சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை - சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடுபவர்களை கைது செய்யக் கூடாது என காவல் துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை - சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்தும் திட்டத்திற்கு நிலம் கையகபடுத்தும் அரசின் நடவடிக்கை எதிர்த்து விவசாயிகள், நில உரிமையாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் தொடர்ந்த வழக்குகள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நிலுவையில் உள்ளது.
8 வழி சாலைக்கு எதிராக அமைதி வழியில் போராடுபவர்களை கைது செய்ய கூடாது : சென்னை உயர்நீதிமன்றம்:
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சேலத்தில், இன்று காலை 8 வழி சாலை திட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்திய 10-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்திருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் திருமண மண்டபத்தில் வைக்கபட்டு பின்னர் விடுவிக்கப்பட்டு விட்டதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள், இத்திட்டத்திற்கு எதிராக அமைதியாக, ஜனநாயக வழியில் போராடுபவர்களை கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க கூடாது என உத்தரவிட்டனர்.
மேலும், உண்மையாக போராடுபவர்கள் யார், சட்டம் - ஒழுங்கு பாதிப்படையும் வகையில் போராடுபவர்கள் யார் என்கிற வித்தியாசத்தை காவல் துறையினர் அறிய வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபர் 8 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.