முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினிக்கு வழங்கப்பட்ட பரோலை அக்டோபர் 15 தேதி வரை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. நீட்டிக்க கோரிய மனுவையும் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக பரோல் வழங்க கோரி வழக்கு தொடர்ந்த நளினிக்கு, ஒரு மாதம் பரோல் வழங்கி ஜூலை 5ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி ஜூலை 25 முதல் பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்ததார். பின்னர் மகளின் திருமண ஏற்பாடுகள் நிறைவடையாத நிலையில் மீண்டும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்க கோரி நளினி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் 3 வாரங்களுக்கு பரோல் நீட்டித்து கடந்த மாதம் 22 ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், நளினியின் பரோல் வரும் 15 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து அக்டோபர் 15 வரை பரோல் நீட்டிப்பு வழங்க கோரி நளினி தரப்பில் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி மகளின் திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும், இலங்கையில் உள்ள தனது மாமியார் விசா பிரச்சினை காரணமாக இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் சென்னை வந்து விடுவார் என்பதாலும் பரோலை அக்டோபர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என மனுவில் நளினி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக அனுப்பிய கோரிக்கை மனுவை அரசு நிராகரித்து விட்டதாகவும் நளினி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு பதிலளிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனவும், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களை கூறி பரோல் நீட்டிப்பு வழங்க மனுதரார் கோருகின்றனர் எனக் கூறி, பரோல் நீட்டிப்பு வழங்க அரசுத்தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் முதலில் மனுதாரர் நேரில் ஆஜரானார், அவருக்கு பரோல் வழங்கப்பட்டது. இரண்டு வாரங்கள் பரோல் நீட்டிப்பு கோரிய போது மூன்று வாரங்கள் பரோல் வழங்கப்பட்டது. தற்போதும் நீட்டிப்பு வழங்க கோருகிறார். சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும் எனவே தற்போதைய நிலையில் பரோல் நீட்டிப்பு வழங்க முடியாது என நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து மனுவை திரும்பப் பெறுவதாக நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, நீதிபதிகள் மனுவை திரும்ப பெற அனுமதி அளித்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.