சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரை கத்தியால் வெட்டிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் இளவரசு (45). இவரது ஓட்டலில் போதையில் வந்த மூன்று பேர் உணவு சாப்பிட்டு உள்ளனர்.
உணவு சாப்பிட்டு முடித்த பின்பு பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து விட்டு, இளவரசுவையும் வெட்டினர்.
அத்துடன் கல்லா பெட்டியில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நசரத்பேட்டை போலீசார் வெட்டுக்காயம் அடைந்த ஓட்டல் உரிமையாளர் இளவரசுவை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/02/15/1WW7qVNfGH1tVhLlmLM1.jpg)
பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார் செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த சசிகுமார் (23), அவரது நண்பர்களான வில்லிவாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (25) மற்றும் முத்து (30) ஆகிய மூன்று பேரையும் செம்பரம்பாக்கம் சுடுகாடு அருகே கைது செய்தனர்.
தப்பியோட முயன்றபோது போலீசார் மடக்கி பிடித்ததில் மூன்று பேருக்கும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஹோட்டல் உரிமையாளர் மட்டுமின்றி மூவரும் நூம்பல் பகுதியில் நடந்து சென்ற வட மாநில வாலிபரை வெட்டி அவரிடம் செல்போனை பறித்தது விசாரணையில் தெரியவந்தது.
அதுமட்டுமின்றி அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து சென்றவர்களை கத்தியால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து கத்தி, ஐந்து செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதில் சசிகுமார் என்பவர் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் சரித்திரம் பதிவேடு குற்றவாளி என்பதும், கடந்த வாரம் தான் சிறையிலிருந்து அவர் ஜாமினில் வெளிவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.