/tamil-ie/media/media_files/uploads/2022/08/Traffic.jpg)
chennai traffic diversion
சென்னையில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு, முக்கிய சாலைகளில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 75வது சுதந்திர தினவிழா 15 ஆம் தேதி சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 6) மற்றும் வருகிற 11, 13, 15 ஆகிய நாட்களில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு மேற்கண்ட நாட்களில் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் நேரம் வரை, கீழ்க்கண்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட உள்ளது.
அதன்படி நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதிவரை அமையப் பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்படும்.
காமராஜர் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக, பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்து அடையலாம்.
பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும், வடக்கு கோட்டை பக்க சாலை ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை வந்தடையலாம்.
அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம்.
முத்துசாமி சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.
இந்த ஏற்பாட்டிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு சென்னை பெருநகர காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.