/indian-express-tamil/media/media_files/2025/09/24/kotturpuram-2-2025-09-24-12-43-00.jpg)
கோட்டூர்புரம் காவல்நிலைய எஸ்.ஐ.ஆக இருந்த பி. ஆறுமுகம் காவலர்கள் எம்.மனோகரன், பி.என். ஹரிஹர சுப்ரமணியன் ஆகிய் 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
சென்னை, கோட்டூர்புரத்தில் 2009-ம் ஆண்டு விசாரணை கைதி பழனி, கோட்டூர்புரம் காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்த வழக்கில், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு தலைமை காவலர்களுக்கு சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த குட்டி பழனி என்கிற பழனி குடிபோதையில் தகராறு செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோட்டூர்புரம் காவல்நிலைய போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், பழனி போதையில் போலீசாரிடம் தகராறு செய்ததோடு, மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்காததால், போலீசார் அவரை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர், பழனி வீட்டிற்கு அனுப்பப்பட்டார். ஆனால், அவர் உயிரிழந்ததால், கோட்டூர்புரம் போலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி பழனியின் தந்தை ரங்கநாதன் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில் கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து, அதை சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையருக்கு அனுப்பி வைத்தார்.
போலீசார் மீதான இந்த வழக்கில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, துணைக்கோட்ட நீதித்துறை நடுவர் நடத்திய விசாரணையில், பழனியின் மரணத்திற்கு காவல்துறையினரின் தாக்குதல் தான் காரணம் என அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யபட்டது.
துணைக்கோட்ட நீதித்துறை நடுவர் சி.ராஜேந்திரனின் புகாரை அடிப்படையாக கொண்டு, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, கோட்டூர்புரம் காவல் நிலைய குற்றப் பிரிவு எஸ்.ஐ.ஆக இருந்த பி. ஆறுமுகம் காவலர்கள் எம்.மனோகரன், பி.என். ஹரிஹர சுப்ரமணியன், வின்சென்ட், ஏழுமலை ஆகிய 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை சென்னை அல்லிக்குளம் வணிக வளாகத்தில் அமைந்துள்ள 6வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையில், புகார்தாரரான துணைக்கோட்ட நீதித்துறை நடுவர் தரப்பில் அரசின் பெருநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கே.தேவபிரசாத் ஆஜராகி வாதிட்டார். வழக்கு நிலுவையில் இருந்தகாலத்தில் வின்சென்ட் மற்றும் ஏழுமலை ஆகியோர் இறந்துவிட்டதால், அவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி வி.பாண்டியராஜ் புதன்கிழமை தீர்ப்பளித்தார். இதில், பழனியின் மரணத்திற்கு காவல்துறையினர் தாக்கியதுதான் காரணம் என விசாரணையில் நிருபணம் ஆகியுள்ளது. கோட்டூர்புரம் எஸ்.ஐ.-ஆக இருந்த பி. ஆறுமுகம் காவலர்களாக இருந்த எம். மனோகரன், பி.என். ஹரிஹர சுப்ரமணியன் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவித்தார்.
மேலும், எஸ்.ஐ. பி. ஆறுமுகம் காவலர்கள் எம்.மனோகரன், பி.என். ஹரிஹர சுப்ரமணியன் ஆகிய் 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
கோட்டூர்புரம் காவல்நிலைய எஸ்.ஐ.ஆக இருந்த பி. ஆறுமுகம் காவலர்கள் எம்.மனோகரன், பி.என். ஹரிஹர சுப்ரமணியன் ஆகிய் 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.