வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். அதேபோல் நவம்பர் 26 முதல் சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும், அதேபோல இந்த ஆண்டும் தற்போது பருவமழை உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கி நேற்று வரை பருவமழை வழக்கத்தை விட 3% அதிகமாக பெய்துள்ளது.
குறிப்பாக சென்னையில் 544.1 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 550.7 மி.மீ என மழை பதிவாகியுள்ளது. கோவையில் 432.5 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இயல்பை விட 64% கூடுதலாக பெய்திருக்கிறது.
இந்நிலையில் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசி வரை இன்று மழை நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். சென்னையை பொறுத்த வரை தற்போது பனிப்பொழிவு இருந்தாலும் நவ.26 முதல் மழை இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இன்று அதிகாலை முதல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. முன்னதாக நேற்று வெளியிடப்பட்டிருந்த வானிலை அறிவிப்பில், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 23-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“