/indian-express-tamil/media/media_files/UPJ0M011xLz8PcGt1ORu.jpg)
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ) கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இயக்கவும் பராமரிப்பதற்கும் தனியார் நிறுவனத்தை நியமித்துள்ளது என செய்தி வெளியாகி உள்ளது.
சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்து, திறப்பு விழா பல ஆண்டுகளாக தாமதமாகி வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் பொங்கல் பண்டிகைக்குள் திறக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், இந்த பேருந்து நிலையத்தை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் புனேவைச் சேர்ந்த பி.வி.ஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது என்று டைம்ச் ஆஃப் இந்தியா தளத்தில் செய்தி வெளியாகி உள்ளது.
இந்த நிறுவனம் குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவன், உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் ஆகியவற்றின் பராமரிப்பு பணிகளின் இணை நிறுவனமாக இருப்பது மட்டுமல்லாமல், பல சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களின் பராமரிப்பு பணிகளையும் இந்த நிறுவனம் செய்து வருகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இயக்கும் பணி மற்றும் பராமரிக்கும் பணியை இந்த நிறுவனத்துக்கு அளிக்கும் நடவடிக்கை பயணிகளுக்கு தரமான சேவையை வழங்குவதையும், நாட்டின் சிறந்த வளாகத்திற்கு இணையாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தைப் பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் முன்னணி காபி கடைகள், உணவுச் சங்கிலிகள் மற்றும் மலிவு விலையில் கிடைக்கும் உணவகங்கள், ஆவின் பார்லர்கள், இயந்திரமயமாக்கப்பட்ட பராமரிப்பு, சுத்தமான மற்றும் நேர்த்தியான உட்புறங்கள், மரியாதையான ஊழியர்கள் மற்றும் பல விற்பனை நிலையங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 108 கடைகள், பார்க்கிங், நுழைவு கட்டணம் மற்றும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பயன்படுத்தி, கிளாம்பாக்கம் பஸ் டெர்மினஸ் சிறந்த முறையில் பராமரிக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“நாங்கள் டெல்லியிலும், நாடு முழுவதும் சில இடங்களிலும் ஐ.எஸ்.பி.டி-யை பராமரித்து வருகிறோம். கிளாம்பாக்கம் பஸ் டெர்மினஸ் விமான நிலையத்திற்கு இணையாக பராமரிக்கப்படும்” என்று பி.வி.ஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தெற்கு உதவி பொது மேலாளர் என். அனந்தராமன் கூறினார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு, வழக்கமான பயணிகளைத் தவிர, முன்னணி பிராண்டுகளைத் திறப்பதன் மூலம் மக்களை ஈர்க்க இந் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. “அனைத்து வருமானப் பிரிவினருக்கும் உணவளிக்கும் கடைகள் இருக்கும். அரசு நிர்ணயித்த கட்டணத்தின்படி பார்க்கிங் இருக்கும்” என அவர் உறுதியளித்தார்.
மாற்றுத் திறனாளிகள் உரிமை ஆர்வலர்கள் கூறுகையில், அணுகல் தணிக்கைக்காக எம்பேனல் ஏஜென்சி டெர்மினஸுக்குச் சென்றுள்ளது, அவர்கள் டிசம்பர் 26-ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். “டெர்மினஸ் திறக்கும் முன், குறைபாடுகள் சரிசெய்யப்பட வேண்டும்” என்று மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் கூட்டணியின் உறுப்பினர் வைஷ்ணவி ஜெயக்குமார் டைம்ஸ் ஆஃப் இந்தியா-விடம் கூறினார். .
“வெள்ளத்தைத் தடுக்க ஜி.எஸ்.டி சாலையின் குறுக்கே பெரிய குழாய் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. திறப்பு விழாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலினின் தேதிக்காக காத்திருக்கிறோம்” என சி.எம்.டி.ஏ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.