சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த ஒரு கட்டுமானப் பணியின்போது, எதிர்பாராத விதமாக மின் வயர்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் பொது மருத்துவ சிகிச்சைத் துறை கட்டடத்தில் சில மணி நேரங்களுக்கு மின்சாரம் தடைபட்டது.
இந்த திடீர் மின் தடையால், அங்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த 70-க்கும் மேற்பட்டோர் பெரும் அவதிக்குள்ளாகினர்.
மின் தடை ஏற்பட்டதை அறிந்ததும், மருத்துவமனை நிர்வாகம் உடனடியாகச் செயல்பட்டது. மருத்துவமனை முதல்வர் டாக்டர் லியோ டேவிட் மற்றும் நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் வாணி தலைமையிலான குழுவினர், பாதிக்கப்பட்ட நோயாளிகளை அங்கிருந்து மற்றொரு வார்டுக்கு விரைவாக மாற்றினர். அனைத்து நோயாளிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும், சில மணி நேரங்களுக்குப் பிறகு மின் இணைப்பு சீரமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் லியோ டேவிட் கூறுகையில், "கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 40-க்கும் மேற்பட்ட துறைகள் செயல்பட்டு வருகின்றன. உள்நோயாளிகள் பிரிவும் அதற்கேற்ப இயங்கி வருகிறது. மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடத்துக்கு அருகில் அமைந்துள்ள பொது மருத்துவ சிகிச்சைத் துறை கட்டடம் தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்டது. இந்த இரு தளங்களிலும் 42 ஆண்களும், 20 பெண்களும் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்தனர்.
அந்தக் கட்டடத்தின் மேல் தளத்தில் பொதுப் பணித் துறை கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காகக் கட்டடத்தின் அருகே தரைப் பகுதியில் பள்ளம் தோண்டும்போது, கட்டுமான நிறுவனத்தினர் வியாழக்கிழமை மின் வயர்களைத் தவறுதலாகத் துண்டித்துவிட்டனர். அத்துடன், ஜெனரேட்டர் மற்றும் மாற்று மின் வழித்தட வயர்களையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் பொது மருத்துவத் துறை கட்டடத்துக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை அறிந்தவுடன், அங்கிருந்த நோயாளிகளை உடனடியாகப் பாதுகாப்பாக வேறு வார்டுக்கு மாற்றிவிட்டோம். ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளோ, தீவிர பாதிப்புக்குள்ளான நோயாளிகளோ எவரும் அங்கு இல்லை. இரவு 9 மணிக்கு பிறகு மின் இணைப்பு சீரானது," என்றார்.