தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், கொரோனாவுக்கு உயிரிழந்த மகளின் துக்கம் தாளாமல் தந்தை ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
திருவொற்றியூரைச் சேர்ந்த 82 வயதான கிருஷ்ணன், தனது 32 வயது மகள் சசிகலா கொரோனாவால் உயிரிழந்த துக்கம் தாளாமல் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் தனது அடுக்குமாடி கட்டிடத்தின் முதல் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் அவருக்கு கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணன் தனது மகள் சசிகலாவுடன் தனியாக தங்கியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். கிருஷ்ணனின் மகள் சசிகலா கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். சசிகலா கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் ஈடுபட்டு வந்தார்.இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சசிகலா கொரோனா தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் அவள் எடுத்துக் கொண்டதால், வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் இருந்தார். ஆனால் நோயின் தீவிரம் அதிகமானதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சசிகலா இறந்ததிலிருந்து கிருஷ்ணன் தனியாக இருந்ததாக அண்டை வீட்டார் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சசிகலா தான் அவரது குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவராக இருந்துள்ளார். “சசிகலா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அக்கம்பக்கத்தினர் கிருஷ்ணனுக்கு உணவு வழங்கினர். ஆனால் சசிகலாவின் மரணத்தைத் தொடர்ந்து, கிருஷ்ணன் அண்டை வீட்டாரைச் சார்ந்திருக்க விரும்பவில்லை, ”என்று ஒரு அதிகாரி கூறினார்.
இந்த நிலையில் வியாழக்கிழமை, கிருஷ்ணன் அடுக்குமாடி கட்டிடத்தின் முதல் தளத்திலிருந்து குதித்தார். அக்கம்பக்கத்தினர் அவரது அழுகையைக் கேட்டு அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு கைகள் மற்றும் கால்களில் பலத்த காயங்கள் மற்றும் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil