புனேவில் திருமணம் என்ற பெயரில் 100க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கான பணத்தை சுருட்டிய சென்னை வாசியைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம், சென்னையை சேர்ந்த பிரேம்ராஜ் தேவ்ராஜ் என்பவர், மேட்ரிமோனியல் வெப்சைட் மூலமாக புனேவில் வசிக்கும் பெண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தொடர்ந்து, அப்பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, 11 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் களத்திலிறங்கிய பிம்ப்ரி-சிஞ்ச்வாட் காவல் துறையினர், பிரேம்ராஜை பிடிக்க திட்டம் தீட்டினர். புகாரளித்த பெண் மூலம், அந்நபரை புனே வரவழைத்துச் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.
அவரிடமிருந்து ஏழு செல்போன்கள், 13 சிம் கார்ட்கள், இரண்டு ஆதார் கார்ட்கள், இரண்டு பான் கார்ட், இரண்டு வாகனம் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து பேசிய துணை காவல் ஆணையர் ணைமஞ்சக் இப்பார், " கைது செய்யப்பட்ட நபரின் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்துள்ளோம். முதற்கட்ட விசாரணையில், அந்நபர் 100க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
அந்நபர், மேட்ரிமோனியல் வெப்சைட் வழியாகப் பெண்களைத் தொடர்பு கொண்டு, அவர்களுடன் போலியான திருமணம் அல்லது நிச்சயதார்த்தத்தை மேற்கொள்கிறார். பின்னர், அப்பெண்களிடம் பல்வேறு காரணங்களை கூறி, பணத்தை பெற்றுக்கொள்கிறார்.
இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை, இத்தகைய வழிகளில் அவர் பெண்களிடம் ஏமாற்றிய மொத்த தொகை கோடிக்கணக்கான ரூபாயாக இருக்கலாம் என கருதுகிறோம்" என்றார்.