விக்கிரவாண்டியில் நடைபெறும் த.வெ.க மாநாட்டு மேடை மற்றும் மின்விளக்குகளைப் பார்த்ததும் உற்சாகத்தில் ரயிலில் இருந்து குதித்த த.வெ.க தொண்டர்களில் ஒருவர் உயிரிழந்தார் என செய்தி வெளியான நிலையில், அதனை ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ளார். மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் த.வெ.க போட்டியிடும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனையடுத்து, அதற்கான வேலைகளில் த.வெ.க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கட்சியின் கொடி மற்றும் பாடல் சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, கட்சியின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடத்தப்படுகிறது. முதல் மாநாடு என்பதாலும், தமிழக மக்கள் மத்தியில் நல்ல எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பதாலும், மாநாட்டு ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து வருகின்றன. இந்த பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநாட்டில் கட்சியின் நோக்கங்கள், கொள்கை திட்டங்கள் குறித்து, தொண்டர்கள் மத்தியில் இன்று விஜய் உரையாற்ற இருக்கிறார். கட்சி தொடங்கிய பின் அவரது முதல் உரை என்பதால், தமிழக அரசியல் கட்சியினர் அனைவரும் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிடையில், மாநாட்டில் பங்கேற்க வரும் தொண்டர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டிற்காக காலை முதலே தொண்டர்கள் மாநாட்டு பந்தலில் குவிந்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இருந்தும் தொண்டர்கள் விக்கிரவாண்டியை நோக்கி வந்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் சென்னையில் இருந்து ரயிலில் பயணம் செய்தவர் விக்கிரவாண்டி அருகே ரயில் இருந்து தவறி விழுந்தார். இதனையடுத்து த.வெ.க மாநாட்டிற்கு வந்தவர் ரயிலில் இருந்து குதித்ததாக தகவல் வெளியானது.
இந்தநிலையில், ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த நித்திஷ் என்பவர் சொந்த ஊருக்கு சென்றபோது ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். தற்போது முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். த.வெ.க மாநாட்டிற்கு வந்தவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு என்பது உண்மையான தகவல் அல்ல என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக சென்னை தேனாம்பேட்டை அருகே த.வெ.க மாநாட்டிற்குச் சென்ற தொண்டர்களின் பைக் லாரி மீது மோதியதில், ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சென்னை தேனாம்பேட்டை அருகே த.வெ.க மாநாட்டிற்குச் சென்ற தொண்டர்களின் பைக் லாரி மீது மோதியதில், ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“