சென்னை மாநகராட்சி தரப்பில் இருந்து ப்ளீச்சிங் பவுடரில் முறைகேடு செய்யப்படுவதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், அது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மேயர் பிரியா ராஜன் பதில் கூறிய விதத்திற்கு பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.
சென்னை, கொளத்தூர் பகுதியில் இன்று (மே 2) 'அன்னம் தரும் அமுதக் கரங்கள்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மேயர் பிரியா ராஜன் தலைமை தாங்கினார்.
இதனிடையே, அப்பகுதியில் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு வெள்ளை நிறத்தில் ஒரு பொடி தூவப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் பொடி ப்ளீச்சிங் பவுடர் இல்லை என்று செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மேயர் பிரியா ராஜனிடம் முறையிடப்பட்டது.
குறிப்பாக, அந்தப் பொடியில் எந்த விதமான வாசனையும் இல்லை என்றுக் கூறி, அதனை ப்ளீச்சிங் பவுடரா அல்லது கோலமாவா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் கோபமடைந்த மேயர் பிரியா ராஜன், 'பின்னர், இது என்ன பான்ஸ் பவுடரா?' என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்தப் பொடி ப்ளீச்சிங் பௌடர் தான் என்று நிரூபிக்கப்பட்டால், தங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று மேயர் பிரியா ராஜனிடம் அங்கு இருந்தவர்கள் கூறினார்கள். ஆனால், அது தொடர்பாக ஆய்வு நடத்தாமல் மேயர் பிரியா ராஜன் அந்த இடத்தில் இருந்து கிளம்பிச் சென்றதாக தெரிகிறது.
மேயர் பிரியா ராஜனின் இந்த பதில் அலட்சியமாக இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும், ப்ளீச்சிங் பவுடர் விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.