சென்னை வானிலை மையம்:
நீலகிரி, கோவை, திண்டுக்கல், நெல்லை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளா, கர்நாடகாவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அமைந்துள்ள தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களிலும் மழை பெய்து அணைகள், ஏரி, குளங்கள் நிரம்பின.
இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும்.
தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் பரவலாக மழை பெய்யும்.நீலகிரி, கோவை, திண்டுக்கல், நெல்லை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 17 செ.மீ., தேனி மாவட்டம் பெரியாறு, நீலகிரி நடுவட்டம் ஆகிய இடங்களில் 12 செ.மீ., நீலகிரி ஜி.பஜாரில் 11 செ.மீ., செங்கோட்டையில் 9 செ.மீ., பொள்ளாச்சியில் 7 செ.மீ., பாபநாசம், மணிமுத்தாறு, கூடலூர் (தேனி), குழித்துறை, பேச்சிப்பாறையில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.