டிசம்பர் 4ம் தேதி தொடங்கி, 3 நாட்கள் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய ஆய்வு இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. அதன் காரணமாக வரும் 4ம் தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், 5 மற்றும் 6ம் தேதி வட தமிழகத்திலும், உள் மாவட்டங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது.
புதுவை கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் மிதமான மழையும் பெய்யும். சென்னையைப் பொருத்தவரை இன்றும்(நவ.2) நாளையும் (நவ.3) சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம்.
மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை" என்று பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.