சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான உத்தேச வடிவமைப்பு மிக அதிக செலவில் இருக்கும் என்பதை உணர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை ஆகியவை ஒட்டுமொத்த வடிவமைப்பைக் குறைக்கும் வகையில் வடிவமைப்பை மாற்றியமைக்க மீண்டும் வரைபடத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த்ந மெட்ரோ ரயில் பாதை கட்டமைப்பின் உயரத்தை குறைப்பதன் மூலம் கட்டுமான செலவைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறையுடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இணைந்து பணியாற்றிய மூன்றாவது புதிய வடிவமைப்பு, குறைந்தபட்சம் ரூ. 1,000 கோடி செலவைக் குறைக்க உதவும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
முதலில், சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் பாதைக்கான முதல் வடிவமைப்பு தயாரிக்கப்பட்ட போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மூன்று நிலை கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டது: மிக உயரத்தில் ரயில், நடுவில் ஒரு விரைவுச்சாலை மற்றும் கீழே பல்லாவரம் மேம்பாலம் என திட்டமிடப்பட்டது. குரோம்பேட்டை ரவுண்டானா மற்றும் தாம்பரம் மேம்பாலத்திற்கு மேலேயும் இதேபோன்ற மூன்று நிலை கட்டமைப்புகள் திட்டமிடப்பட்டன.
“இருப்பினும், தற்போது இரண்டு நிலைகளில் வடிவமைப்பைத் திட்டமிடுகிறோம். ஒட்டுமொத்த உயரத்தைக் குறைக்கும் வகையில் வடிவமைப்பு மாற்றப்படுவது இது மூன்றாவது முறை” என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குனர் (திட்டங்கள்) டி.அர்ச்சுனன் கூறியதாக DT NEXT செய்தி வெளியிட்டுள்ளது.
மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இதை கவனமாகப் பரிசீலித்த பிறகு, இந்த வடிவமைப்பு கட்டுமானம் மிக அதிகமாக இருக்கும் என்றும், இதனால் மிக அதிக கட்டுமானச் செலவு ஏற்படும் என்றும் கண்டறிந்த பின்னர், இந்த வடிவமைப்பை மாற்றுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதனால், இரண்டாவது திட்டத்தை தயாரிக்க வழிவகுத்தது.
மேலும், “இந்த சாலையின் அகலம் கிட்டத்தட்ட 30 மீட்டர் என்பதால், மேம்பாலத்திற்கு மேலே இருக்கும் முன்மொழியப்பட்ட மெட்ரோ லைனுடன் இணைக்காமல் இருபுறமும் மேம்பாலம் கட்டலாம்” என்று டி. அர்ச்சுனன் கூறியதாக DT NEXT செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், இந்த அமைப்பும் கூட செலவு மிகுந்ததாகக் காணப்பட்டதால், அதிகாரிகள் ஒரு மாதத்திற்கு முன்பு மற்றொரு முறை வடிவமைப்பை மாற்றுவதற்கு திட்டமிட்டனர். “தற்போதைய திட்டத்தின்படி, இரண்டு நிலைகள் இருக்கும், ஆனால், ஒட்டுமொத்தமாக குறைந்த உயரத்தில் இருக்கும், இது கட்டுமான செலவை குறைந்தது 1,000 கோடி ரூபாய் குறைக்க உதவும்” என்று அர்ச்சுனன் தெரிவித்துள்ளார்.
இந்த வடிவமைப்பை இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் டி. அர்ச்சுனன் தெரிவித்தார். “பல்லாவரம், குரோம்பேட்டை மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் தற்போதுள்ள கட்டமைப்புகளுடன் மெட்ரோ ரயில் பாதையை ஒருங்கிணைத்து உயரத்தையும் அதன் மூலம் செலவையும் குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நெடுஞ்சாலைத்துறையுடன் மேலும் விவாதித்து இறுதி செய்யும்” என்று அர்ச்சுனன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“