மெட்ரோ ரயில் ஸ்டேசன்களுக்கு அருகிலேயே ஷாப்பிங் மால்களை அமைத்து அதன்மூலம், வருவாய் ஈட்ட சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னையின் முக்கிய போக்குவரத்து அம்சமாக உருமாறியுள்ள மெட்ரோ ரயில் சேவையை, தற்போதைய அளவில் தினந்தோறும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். வார நாட்களில், பஸ், புறநகர் ரயில்களை போன்று, மெட்ரோ ரயில்களிலும் நின்றுகொண்டு பயணிக்கும் அளவிற்கு மெட்ரோ ரயில் சேவை, சென்னை மக்களின் அத்தியாவசிய பயன்பாடுகளில் ஒன்றாகிவிட்டது என்று கூறினால் அது மிகையல்ல.
நாள் ஒன்றுக்கு 4 லட்சம் மக்கள் பயன்படுத்தும் வகையில், 2.5 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில்களை இயக்கவும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டு சோதனை முயற்சிகளையும் துவக்கியுள்ளது.
பயணிகளின் வருகை மூலம், வருவாய் ஈட்டிவந்த சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம், மெட்ரோ ரயில் ஸ்டேசன்களுக்கு அருகில் உள்ள இடங்களை கையகப்படுத்தி அங்கு ஷாப்பிங் மால்கள் போன்ற வணிக வளாகங்களை ஏற்படுத்தி, மக்களுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்வதன் மூலம், இரட்டிப்பு வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக நேரு பார்க் மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் ஸ்டேசன்களின் அருகே ஷாப்பிங் மால்களை கட்ட திட்டமிட்டுள்ளது. ஷாப்பிங் மால் அருகே மெட்ரோ ரயில் ஸ்டேசன் போன்ற அமைப்பு, 2023ம் ஆண்டு முதல் மக்களுக்கு சாத்தியமாகும் என்று சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலங்களை கையகப்படுத்திய பின், டெண்டர் விடப்பட்டு அதன்மூலம் நிறுவனங்களை தேர்வு செய்து, சிஎம்டிஏவின் ஓப்புதலை பெற்ற பின் கட்டுமான பணிகள் துவக்கப்பட்டு, அந்த நிறுவனங்களே பயன்படுத்தி கொள்ளவும், பராமரித்துக்கொள்ள வேண்டும் என்பதனடிப்படையில் செயல்பட்டு, அதன்மூலம் இரட்டிப்பு வருவாய் ஈட்ட மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.