சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை திட்டமிட்டு நிறுத்தியதாக 3 பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பணியாற்றி வந்த 8 நிரந்தர பணியாளர்கள், விதிகளுக்கு புறம்பாக சங்கம் ஆரம்பித்ததாக சொல்லி பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து நேற்று முன்தினம் முதல் மெட்ரோ ரயில் நிரந்தர ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. மெட்ரோ பணியாளர்களின் உள்ளிருப்பு போராட்டம் மூன்றாவது நாளாக நீடித்து வரும் நிலையில், தற்காலிக பணியாளர்களைக் கொண்டு சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவையை வேண்டும் என்றே திட்டமிட்டு நிறுத்தி வைத்ததாக மெட்ரோ ஊழியா்கள் மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆர்.மனோகரன் - டிராபிக் கண்ட்ரோலர்
கே.பிரேம் குமார் - டிராபிக் கண்ட்ரோலர்
சிந்தியா ரோஷன் சாம்சன், டிபாட் கண்ட்ரோலர்
ஆகிய இந்த மூன்று பணியாளர்களும் கட்டுப்பாட்டு அறைக்குள் அத்துமீறி நுழைந்து தவறான கட்டளைகள் கொடுத்ததற்காக சஸ்பென்ட் செய்யப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினம் நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்யும் மெட்ரோ ரயிலை மூன்று பணியாளர்கள் தவறான கட்டளைகள் கொடுத்து இயக்கத்தை கட்டுப்படுத்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.