சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம், டைட்டன் வாட்ச் நிறுவனத்துடன் இணைந்து மெட்ரோ ரயில் பயணத்தை இனிதாக்கும் வகையில் புதிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த ஸ்மார்ட் வாட்சை அணிந்துகொள்பவர்கள், மெட்ரோ ரயில் ஸ்டேசன் வளாகத்திற்குள் எங்கும் நிற்கத்தேவையில்லை. அந்த வாட்சினுள் பொருத்தப்பட்டுள்ள சிப்பில் நமது அனைத்து தகவல்களும் அடங்கியிருப்பதால், எவ்வித தடைகளும் இன்றி, எளிதாக அதேசமயத்தில் மெட்ரோ ரயில் பயணம் இனிமையாக இருக்க வழிவகை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஸ்மார்ட் வாட்சின் விலை ரூ. ஆயிரம் முதல் 1,500 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டைட்டன் வாட்ச் நிறுவனத்துடன், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம், நடத்திவந்த இதுதொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் இதுதொடர்பான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்ரோ ரயில் சேவைகளை அதிகம் பயன்படுத்துவோருக்கு இந்த சேவை ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நமது தகவல்கள் அடங்கிய சிப், புதிய வாட்ச்களில் மட்டும் தான் கிடைக்கப்பெறுமா அல்லது தற்போது நாம் பயன்படுத்தி வரும் வாட்சுகளிலும் இந்த சிப்பை பொருத்திக்கொள்ளலாமா என்பது தொடர்பான ஆய்வு நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரீசார்ஜ் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டு வரும் நிலையில், சிப் மூலமான தொழில்நுட்ப வசதி, மெட்ரோ ஸ்டேசன்களில் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, இந்த ஸ்மார்ட் வாட்ச்களின் அறிமுகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.