சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சக மாணவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மாணவியை ரயிலில் இருந்து தள்ளி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் குற்றவாளியை பிடிக்க காவல்துறை தரப்பில் 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியை அடுத்துள்ள ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சந்தியா (20). தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் சந்தியாவுக்கு அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற வாலிபர் காதல் தொல்லை கொடுத்துவந்ததாக கூறப்படுகிறது. சதீஷூம் அதே கல்லூரியில் படித்து வந்த நிலையில், அவ்வப்போது சந்தியாவுடன் பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் தன்னை காலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
அந்த வகையில் சதீஷ் வழக்கம்போல் இன்று சந்தியாவிடம் பேசுவதற்காக அவரை பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் சந்தித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் திடீரென சந்தியாவை அந்த வழியாக வந்த மின்சார ரயிலில் தள்ளியுள்ளார்.
இதில் மின்சார ரயிலில் மோதி பலத்த காயமடைந்த சந்தியா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் பயந்துபோன சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய சதீஷை பிடிக்க 7 தனிப்படை அமைத்து தீவிரமாக தடி வருகின்றனர். மேலும் ரயில்வே போலீசார் சார்பில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil