/indian-express-tamil/media/media_files/2025/01/26/oEFAIoJKSIpNlONonMwm.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை:
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100.90-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 92.49-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சி.என்.ஜி எரிபொருள் ஒரு கிலோ ரூ. 90.50-க்கு விற்பனையாகிறது.
த.வெ.க ஆலோசனை கூட்டம்:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது கட்சி நிர்வாகிகளுடன் இன்று முதல் நான்கு நாட்களுக்கு ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.
-
Jan 27, 2025 21:43 IST
பள்ளி கல்வித்துறையில் 47,000 தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றம்
பள்ளி கல்வித்துறையில், ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், அமைச்சு பணியாளர்கள் என மொத்தம் 47,000 தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிக பணியிடங்கள் தொடர் நீடிப்பு, செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
Jan 27, 2025 20:19 IST
பாலியல் குற்றவாளி சார்களின் புகழிடம் அ.தி.மு.க: அமைச்சர் சிவசங்கர்
சார்களை காப்பாற்றுவதில் கைதேர்ந்தவரான இ.பி.எஸ்க்கு அதிமுகவின் 'சார்' களை நினைவிருக்கிறதா? நீங்கள் மறந்தது போல நடித்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் ‘அதிமுக சார்களை' மறக்க மாட்டார்கள். மொத்த பாலியல் குற்றவாளி சார்களின் புகழிடமாக அதிமுகவை வைத்துக் கொண்டு, பெண்கள் நலனிலும் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டு சிறப்பாக செயலாற்றி வரும் திராவிட மாடல் அரசை குறை கூறினால் அதை மக்களே ஏற்க மாட்டார்கள் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், கூறியுள்ளார்.
-
Jan 27, 2025 19:21 IST
விழுப்புரம் சென்ற மு.க.ஸ்டாலினுக்கு திண்டிவனத்தில் பிரமாண்ட வரவேற்பு
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விழுப்புரம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திண்டிவனத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையில் கூடியிருந்த மக்களை பார்த்து கையசைத்து, அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
-
Jan 27, 2025 18:54 IST
மூடா விவகாரம் - அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை
மூடா நில விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்துள்ளது
-
Jan 27, 2025 18:35 IST
ராமேஸ்வரம் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா; இருவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்த இருவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
-
Jan 27, 2025 18:33 IST
பெரியாரை சிறுமைப்படுத்தினால், தனிமைப்படுத்தப்படுவர்- ஜெயக்குமார்
சீமான் யாராக இருந்தாலும், பெரியாரை சிறுமைப்படுத்தினால், தனிமைப்படுத்தப்படுவர் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
-
Jan 27, 2025 17:59 IST
சிறை கைதிகளின் ஊதியத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக சிறை கைதிகளின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
Jan 27, 2025 17:41 IST
சித்தராமையா மீதான மூடா வழக்கு - தீர்ப்பு தள்ளிவைப்பு
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான மூடா நில முறைகேட்டு வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரிய மனு மீதான வாதங்கள் நிறைவு பெற்றுள்ளது. இதனையடுத்து கர்நாடக உயர்நீதிமன்ற தார்வாட் கிளை தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தது
-
Jan 27, 2025 17:13 IST
அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம் - மு.க. ஸ்டாலின் பெருமிதம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் 22,931 ஸ்மார் கிளாஸ் ரூம் அமைக்கும் பணியைக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைத்தேன். அந்தப் பணி, இன்று சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசுப் பள்ளியில் நிறைவுபெற்றிருப்பதைத் தம்பி அன்பில் மகேஸ் அவர்கள் தொலைபேசியில் என்னிடம் தெரிவித்தார். நவீனமயமான தொடக்கப் பள்ளிகள், நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் நம் மாணவர்கள் இடம்பெற உதவும் மாதிரிப் பள்ளிகள் எனப் பள்ளிக்கல்வித் துறை படைத்து வரும் சாதனைகளால் மகிழ்கிறேன். அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம் என உரக்கச் சொல்வோம்” என பதிவிட்டுள்ளார்.
-
Jan 27, 2025 17:10 IST
ஸோகோ நிறுவனத்தின் சி.இ.ஓ பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக ஸ்ரீதர் வேம்பு அறிவிப்பு
ஸோகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக ஸ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார். புதிய தலைமை செயல் அதிகாரியாக சைலேஷ் குமார் தவே நியமனம் செய்யப்பட்டுள்ளார். முழு நேர ஆய்வு மற்றும் மேம்பாடு செயல்பாடுகளில் கவனம் செலுத்தும் தலைமை விஞ்ஞானி பொறுப்பை ஏற்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jan 27, 2025 17:07 IST
சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. ஜெகநாதன் உள்ளிட்ட 3 பேர் தொடர்ந்த வழக்கு நீதிபதி பெல்லா திவேதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
-
Jan 27, 2025 16:24 IST
7-வது முறை தி.மு.க-வே ஆட்சி அமைக்கும் - ஸ்டாலின் நம்பிக்கை
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதனை எதிர்த்து வெற்றி காண்பதில் திராவிட மாடல் அரசு உறுதியாக இருக்கிறது. டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்தை மக்களின் ஆதரவுடன் ரத்து செய்த பெருமையுடன், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாட்கள் ஆய்வுப் பணியை மேற்கொள்கிறேன். ஏழாவது முறையும் தி.மு.க-வே ஆட்சி அமைக்கும் என்பதை உங்கள் மீதான நம்பிக்கையுடன் உரக்கச் சொல்வேன்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
Jan 27, 2025 15:49 IST
வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம் - ஆ.ராசா
வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக்குழு இறுதி செய்தது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி திருத்தங்களுக்கு நாடாளுமன்றக் கூடுக்குழு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம் என தி.மு.க எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
-
Jan 27, 2025 15:26 IST
சென்னை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய திட்டம்
சென்னை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கருங்குழி - பூஞ்சேரி இடையே 32 கி.மீ தூரத்திற்கு புதிய சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, ரூ.80 லட்சத்தில் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் டெண்டர் வெளியிட்டுள்ளது.
-
Jan 27, 2025 14:55 IST
சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக அறிவிப்பு
சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. தொழிற்சங்க உரிமை கோரி நடந்த போராட்டத்தின்போது, தரப்பட்ட வாக்குறுதியை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது.
-
Jan 27, 2025 14:44 IST
வக்பு சட்டத்திருத்த மசோதா - நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல்
திருத்தி அமைக்கப்பட்ட வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. வக்பு சட்டத்திருத்த மசோதா தொடர்பாக கூட்டுக்குழுவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பரிந்துரைத்த தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் முன்மொழிந்த 14 தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
-
Jan 27, 2025 14:17 IST
ஆஸி.ஓபன் டென்னிஸ் - சாம்பியன் பட்டம் வென்று தமிழ்நாடு வீரர் அசத்தல்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தமிழ்நாட்டு வீரர் பிரித்வி சாம்பியன் பட்டம் வென்றார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக டென்னிஸ் வீரர் பிருத்வி சேகர் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சாம்பியன் பட்டம் வென்றார்.
-
Jan 27, 2025 14:15 IST
உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமல்
நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தது. உத்தரகாண்டில் பழங்குடியினா் தவிா்த்து மற்ற அனைவருக்கும் பொது சிவில் சட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ள்ளது.
திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசு உரிமை ஆகியவற்றில் அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தை பின்பற்றும் வகையில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. திருமணப் பதிவு மட்டுமின்றி, திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்வோரும் முறையாகப் பதிவு செய்வது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jan 27, 2025 14:12 IST
7 மாதங்களில் 22,931 ஸ்மார்ட் போர்டு - பள்ளிக்கல்வித்துறை சாதனை
அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க ‘திறன்மிகு வகுப்பறை’ திட்டத்தின்கீழ் 7 மாதங்களில் 22,931 ஸ்மார்ட் போர்டுகளை அமைத்து பள்ளிக்கல்வித்துறை சாதனை படைத்துள்ளது. கடைசி ஸ்மார்ட் போர்டை துரைப்பாக்கம் அரசுப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார். 8,209 பள்ளிகளில் ஹை டெக் லேப்களை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
Jan 27, 2025 14:11 IST
ஜனவரி .29-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி .29-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என கழகப் பொதுச் செயலாளர் துறை முருகன் அறிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 29-1-2025 புதன் கிழமை காலை 11.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அதுபோது, கழக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். என தெரிவித்தார். இதில் மத்திய அரசின் 2025-26ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது
-
Jan 27, 2025 13:31 IST
அண்ணா பல்கலை. சம்பவம் - சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
அண்ணா பல்கலை. சம்பவம் தொடர்பாக சென்னை காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
-
Jan 27, 2025 13:31 IST
நிர்மலா சீதாராமனை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.பி. கனிமொழி
100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கவேண்டிய ரூ. 1,056 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்கக்கோரி மத்திய நிதியமச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.பி. கனிமொழி மனு அளித்துள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 14ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்
-
Jan 27, 2025 13:14 IST
குடியரசு தின விழா கலை நிகழ்ச்சி - பரிசுகளை வழங்கிய ஸ்டாலின்
குடியரசு தின விழா கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். சிறந்த அலங்கார ஊர்திகளுக்கும் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். விளையாட்டு மேம்பாட்டு துறையின் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. பரிசை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
-
Jan 27, 2025 13:10 IST
ஹீட்டரை ஆன் செய்த இளைஞர் பலி
சுடு தண்ணீர் போட ஹீட்டரை ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வடபழனி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
Jan 27, 2025 13:09 IST
சென்னையில் பள்ளி மாணவிகள் 3 பேர் பாலியல் வன்கொடுமை - 3 இளைஞர்கள் கைது
பெரம்பூரை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த 24 ஆம் தேதி மாயமான நிலையில் போலீசார் தேடி வந்தனர். செல்போன் டவர் மூலம் விசாரணை நடத்திய போது வீணஸ் நகர் அருகே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வீணஸ் நகருக்கு நேரில் சென்று பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மாயமான சிறுமியுடன், மேலும் 2 சிறுமிகள் அவர்களது காதலர்களுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவன் உட்பட 3 பேர் மீதும் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். கைதான கரிமுல்லா மீது 11 வழக்குகளும், 16 வயது சிறுவன் மீது 6 வழக்குகளும், அபிஷேக் மீது ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது. மீட்கப்பட்ட சிறுமிகள் மகளிர் காப்பகத்தில் தங்கவைக்கப்படுள்ளனர்.
-
Jan 27, 2025 12:28 IST
சைஃப் அலிகான் வழக்கு - கைதாகி விடுவிக்கப்பட்டவர் வேதனை
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வழக்கில் காவல்துறையின் செயலால் வாழ்க்கையே சீர்குலைந்துவிட்டது என்று சந்தேகத்தின் அடிப்படையில் கைதாகி விடுவிக்கப்பட்டவர் வேதனை தெரிவித்துள்ளார்.
-
Jan 27, 2025 12:28 IST
ராஜ கண்ணப்பனுக்கு எதிரான வழக்கு - ஐகோர்ட் அதிரடி உத்தரவு
அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், 3 வாரங்களில் பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
-
Jan 27, 2025 12:26 IST
இ.பி.எஸ்-க்கு எதிரான வழக்கு - சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
வேட்பு மனுவில் முக்கிய தகவலை மறைத்ததாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில், சேலம் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
-
Jan 27, 2025 11:31 IST
கொடிக்கம்பங்களை அகற்ற உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள கொடிக்கம்பங்களை 3 மாதத்தில் அகற்ற உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சிக்கு சொந்தமான அனைத்து இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களையும் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வருங்காலத்தில் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைக்க வருவாய்த்துறை அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jan 27, 2025 11:10 IST
எம்.ஐ.டி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை, குரோம்பேட்டை பகுதியில் இயங்கி வரும் எம்.ஐ.டி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இ-மெயில் மூலம் விடுக்கப்பட்ட மிரட்டல் போலி எனக் கண்டறிந்த நிலையில், மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
-
Jan 27, 2025 10:50 IST
போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு பணப்பலன்கள்
போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு பணப்பலன்கள் வழங்க ரூ. 206 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் வழங்க போக்குவரத்து துறை நிதி கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Jan 27, 2025 10:05 IST
ஆட்கொல்லி புலி சடலமாக கண்டெடுப்பு
கேரள மாநிலம், வயநாட்டில் பெண்ணைக் கொன்ற ஆட்கொல்லி புலி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. புலியின் உயிரிழப்பிற்கான காரணம், உடற்கூராய்விற்கு பின்னர் கண்டறியப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jan 27, 2025 09:29 IST
புறநகர் மின்சார ரயில்களில் தினமும் 8.5 லட்சம் பேர் பயணம்
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் தினமும் 8.5 லட்சம் பேர் பயணிப்பதாக ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா தெரிவித்துள்ளார். மேலும், பிற ரயில்களில் 3 லட்சம் பேர் சேர்த்து மொத்தமாக நாள் ஒன்றுக்கு 11.5 லட்சம் பேர் ரயில்களில் பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jan 27, 2025 09:06 IST
தமிழகத்தில் இருந்து விலகிய வடகிழக்கு பருவ மழை
தமிழகத்தில் இருந்து வடகிழக்கு பருவ மழை விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. இது சுமார் 100 நாட்களுக்கு மழைப்பொழிவை ஏற்படுத்தியது. குறிப்பாக, இயல்பை விட 33 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
Jan 27, 2025 08:54 IST
6 பிணைக் கைதிகளை விடுவிக்க முடிவு
இஸ்ரேலைச் சேர்ந்த மேலும் 6 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியுள்ளது. முன்னதாக, போர் நிறுத்தம் அமலுக்கு வந்த முதல் நாளிலேயே 3 பிணைக் கைதிகளை, ஹமாஸ் அமைப்பு விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
-
Jan 27, 2025 08:41 IST
புதினுடன் விரைவில் பேச்சுவார்த்தை - டிரம்ப்
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர புதினுடன் விரைவில் பேசவுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், போர் நிறுத்தம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பல முறை பேசியுள்ளதாக கூறியுள்ள அவர், உக்ரைனில் அமைதி திரும்புவதையே அந்நாட்டு அதிபர் விரும்புகிறார் எனத் தெரிவித்துள்ளார்.
-
Jan 27, 2025 08:09 IST
சூடானில் மருத்துவமனை மீது தாக்குதல் - 70 பேர் உயிரிழப்பு
சூடானில் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 70 பேர் உயிரிழந்தனர். ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மருத்துவமனை மீது துணை ராணுவம் தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு போரின் காரணமாக அங்கிருந்த ஒரே ஒரு மருத்துவமனை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
-
Jan 27, 2025 07:25 IST
உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் இன்று அமல்
உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. பாலினம், சாதி, மதம் அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்காது என அம்மாநில முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி தெரிவித்துள்ளார்.
-
Jan 27, 2025 07:17 IST
த.வெ.க ஆலோசனை கூட்டம்
த.வெ.க தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகளுடன் இன்று முதல் நான்கு நாட்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை, பனையூரில் நடைபெறும் இக்கூட்டத்தில், முக்கிய ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
-
Jan 27, 2025 07:04 IST
ஜாக்டோ - ஜியோ ஆலோசனைக் கூட்டம்
சென்னையில், இன்று ஜாக்டோ - ஜியோ உயர்மட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.