Chennai News: வடகிழக்கு பருவ மழை இன்னும் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் சென்னையில் அக்டோபரில் அதிகபட்சமாக இரண்டே முக்கால் மீட்டர் உயரம் வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருப்பது, சற்றே நம்பிக்கையைக் கூட்டுகிறது. கடந்த ஆண்டு அரங்கேறிய குடிநீர் பஞ்சக் கொடுமை நிகழாமல் இருந்தால் மகிழ்ச்சிதானே?
சிம்பிளான ஒரு புள்ளி விவரம் இது. சென்னையில் பகுதி வாரியாக கடந்த செப்டம்பரில் இருந்த நிலத்தடி நீர்மட்ட அளவும், அக்டோபர் நீர்மட்ட அளவும் தரப்படுகிறது. இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
திருவொற்றியூர்: 4.53 மீட்டர் (செப்டம்பர்)-3.86 மீட்டர் (அக்டோபர்), மணலி : 4.99-3.94, மாதவரம்: 6.30-4.44, தண்டையார்பேட்டை: 7.01-6.28, ராயபுரம்: 7.22-6.66, அம்பத்தூர்: 7.49-4.73, அண்ணா நகர்: 5.81-4.07, தேனாம்பேட்டை: 5.98-4.92, கோடம்பாக்கம்: 7.39-5.91, வளசரவாக்கம்: 6.46-4.58, ஆலந்தூர்: 7.60-5.12, அடையார்: 6.32-4.75, பெருங்குடி: 4.54-4.16, சோழிங்கநல்லூர்: 4.52-4.00,
அதிகபட்சமாக அம்பத்தூரில் 2.76 மீட்டரும், ஆலந்தூரில் 2.48 மீட்டரும் நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது. திருவொற்றியூர், மணலியில் குறைந்தபட்சமாக முறையே 0.65 மீட்டர், 1.02 மீட்டர் நீர்மட்டம் உயர்ந்திருப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது. சராசரி அளவே மழை பொழிந்தபோதும், கணிசமான இந்த நீர்மட்ட உயர்வு சென்னைவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி, மெட்ரோ குடிநீர் வாரியம் ஆகிய இரு துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை நடத்தினார். 2003-ல் ஜெயலலிதா கொண்டு வந்த மழை நீர் சேகரிப்புத் திட்டம் என்ன ஆனது? அதை ஏன் நாம் சரியாக கண்காணிக்கவில்லை? என்பதைச் சுற்றியே அமைச்சரின் கேள்விகள் இருந்தன.
அதைத் தொடர்ந்து சென்னை மாநகர் முழுக்க அனைத்துக் கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு இருப்பதை உறுதி செய்யும் பணியில் இறங்கினோம். மாநகராட்சி, மெட்ரோ வாட்டர் ஆகிய இரு துறை அதிகாரிகளும் இந்த வேலையை செய்தனர். மழை நீர் சேகரிப்பு மையம் அமைக்காத கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பு மையங்களை அதிகரிப்பதில் மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றிதான் இந்த நீர்மட்ட உயர்வு’ என்றார் அவர்.
நீர்மட்டம் கணிசமாக உயர்ந்திருக்கும் ஆலந்தூர் பகுதியில் 13120 கட்டடங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அவற்றில் 12,200 கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பை உறுதி செய்தனர். இது உத்தேசமாக 93 சதவிகிதம். கணிசமாக மழை நீர் சேகரிப்பு மையம் அமைக்கப்பட்ட இங்கு, நீர்மட்ட உயர்வும் கணிசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவன நீர்வள ஆய்வாளரான சுப்பிரமணியனை தொடர்புகொண்டு ஐஇ தமிழுக்காக பேசினோம். அவர் கூறுகையில், ‘சென்னை மெட்ரோ, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து சுமார் மூன்றரை லட்சம் கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு தொடர்பான ஆய்வை நடத்தியிருக்கிறோம். சராசரியாக 75 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை மழை நீர் சேகரிப்பு அமைப்பு இருப்பதை உறுதி செய்தோம். முறைப்படி இல்லாத மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை சரி செய்ய ஆலோசனையும், கால அவகாசமும் வழங்கியிருக்கிறோம். நீர்மட்ட உயர்வுக்கு இது முக்கிய காரணம்தான்.
தவிர, சென்னையில் 210 ஏரிகளில் மழை நீர் சேகரிப்பை உறுதிப் படுத்தியிருக்கிறோம். சென்னையில் உள்ள பல்வேறு கோவில் குளங்களும் மழை நீர் சேகரிப்பில் முக்கிய பங்கு ஆற்றக் கூடியவை. மாட வீதிகளில் ஓடும் தண்ணீர், அங்குள்ள வீடுகளின் கூரைகளில் விழும் தண்ணீர் ஆகியவவை கோவில் குளங்களில் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.’ என்றார் அவர்.
மழை நீர் சேகரிப்பு அமைப்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்து நீர் மட்டம் அதிகரிப்பது நிஜம் என்றாலும், ஒவ்வொரு பகுதி மண்ணின் தன்மைக்கு ஏற்பவும் நீர்மட்ட உயர்வு இருக்கும் என்கிறார்கள் அதிகாரிகள். உதாரணத்திற்கு, மணற்பாங்கான நிலம் என்றால், நீர்மட்ட உயர்வு அவ்வளவு வேகமாக இருக்காதாம். களிமண் நிலம் என்றால், நீர்மட்ட அளவு வேகமாக உயரும்.
கடந்த 30-ம் தேதி டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கடந்த 30-ம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், சென்னை மற்றும் பெங்களூரு நகரங்கள் தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரின் கதியை அடையும் அபாயம் இருப்பதாக எச்சரித்தார். தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம், கடந்த ஆண்டு பெரும் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டது. அந்த வேளையில் அங்கு சென்றிருந்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு பக்கெட் தண்ணீர் என கொடுக்கப்பட்டதாக செய்திகள் வந்தன.
சென்னையில் நிலவரம் அவ்வளவு மோசமாக இருக்கிறதா? இதை அறியவேண்டும் என்றால், Per capita water availability என்கிற அளவீடு பற்றி தெரிய வேண்டும். நீர் வளம், ஒரு பகுதியில் வாழ்கிற மக்களுக்கு போதுமான அளவில் கிடைக்கிறதா? என்பதை Per capita water availability என்கிற அலகில் குறிக்கிறார்கள். குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் நீரின் அளவு அடிப்படையில் இந்த அளவு கணக்கிடப்படும்.
சர்வதேச அளவில் 1700 கியுபிக் மீட்டருக்கு குறைவாக ஒரு பகுதியின் நீர்வளம் இருந்தால், அது தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதியாக கருதப்படும். அந்த வகையில் இந்தியாவே தண்ணீர் தட்டுப்பாடு நாடுதான். இந்தியாவின் Per capita water availability ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருவதுதான் இன்னும் சோகம். 1951-ல் 5177 கியூபிக் மீட்டராக இருந்த இந்தியாவின் நீர் இருப்பு (Per capita water availability), 2014-ல் 1508 ஆக குறைந்திருப்பதாக கூறுகிறார், வேளாண் ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் இயக்குனர் மஹாபத்ரா.
சென்னையைப் பொறுத்தவரை, நாடு சுதந்திரம் அடைந்தபோது 5000 கியூபிக் மீட்டராக இருந்த நீர் இருப்பு தற்போது 1540- ஆக குறைந்திருக்கிறது. நீர்வளம் வேகமாக குறைவது, மக்கள் தொகை வேகமாக பெருகுவது ஆகியவற்றை கருத்தில் கொண்டே மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சென்னையையும், பெங்களூருவையும் தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகருடன் ஒப்பிட்டு எச்சரித்தார்.
மழை நீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்கியதில் இந்தியாவுக்கு முன்னோடி தமிழகம்தான். வேறு பல மாநிலங்களில் இப்போதுதான் அதை உருவாக்குவது குறித்து யோசிக்கவே செய்கிறார்கள். எனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கிக் கொடுத்த அந்தத் திட்டத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு முழுமையாக செயல்படுத்தினாலே எதிர்வரும் தண்ணீர் பஞ்ச அபாயங்களில் இருந்து தமிழ்நாடு தப்பித்துக் கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.