/indian-express-tamil/media/media_files/2025/02/26/SGKNPAJoRqnak8VIpA9Q.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்:
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.90-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 92.49-க்கும் விற்பனையாகிறது. மேலும், சி.என்.ஜி எரிபொருள் ஒரு கிலோ ரூ. 90.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Feb 25, 2025 21:49 IST
சென்னையில் விஜய் உடன் பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பின்போது, என். ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா உடன் இருந்தனர்.
-
Feb 25, 2025 21:15 IST
சமத்துவம் இருக்கும் இடத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல - சு.வெங்கடேசன் எம்.பி
மதுரை எம்.பி சு. வெங்கடேசன்: “500 ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழியுங்கள் பார்ப்போம் என்று சவல்விடுகிறார் ஹெச். ராஜா. சமத்துவம் இருக்கும் இடத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல; காலில் குத்தும் முள்ளைத்தான் பிடுங்குவோம். அதுதான் அறிவுடைமை” என்று தெரிவித்துள்லார்.
-
Feb 25, 2025 20:10 IST
மகா சிவராத்திரி: 350 ரயில்கள் இயக்கம்.. 16 லட்சம் பேர் பயணம் - ரயில்வே அறிவிப்பு
மகா சிவராத்திரியை முன்னிட்டு கும்பமேளா செல்லும் பயணிகள் வசதிக்காக 350 ரயில்கள் பிரயாக்ராஜ் ரயில் நிலையம் வழியே இயக்கப்படும். இதுவரை 335 ரயில்கள் இயக்கப்பட்டதில் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
-
Feb 25, 2025 19:34 IST
நாடாளுமன்ற தொகுதிகள் குறையுமா? யார் சொன்னது என்பதை ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும் - அண்ணாமலை
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை: “நாடாளுமன்ற தொகுதிகள் குறையும் என யார் சொன்னார்கள் என்பதை முதல்வர் தெரிவிக்க வேண்டும். மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்த முயலும் முதல்வரை வன்மையாகக் கண்டிக்கிறேன். மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு என்று எங்கேயும் சொல்லவில்லை; தொகுதி சீரமைப்பு பற்றி சொல்லாத நிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Feb 25, 2025 18:54 IST
குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் ஸ்டாலின் - அண்ணாமலை
பாராளுமன்ற இடங்கள் குறைப்பு என்ற தனது கற்பனையின் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்
-
Feb 25, 2025 18:25 IST
சாம்பியன்ஸ் டிராபி; தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா போட்டி மழை காரணமாக ரத்து
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா இடையேயான போட்டி மழை காரணமாக ரத்தான நிலையில் இரு அணிக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது
-
Feb 25, 2025 17:59 IST
டைடல் பார்க் மேம்பாலம் திறப்பு
சென்னையின் முக்கிய போக்குவரத்து சந்திப்பான டைடல் பார்க் பகுதியில் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு பின்னர் கட்டப்பட்டுள்ள டைடல் பார்க் U வடிவ மேம்பாலத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
-
Feb 25, 2025 17:46 IST
ஜாக்டோ ஜியோ போராட்டம்; 63 ஆயிரம் ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை?
இன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் காரணமாக, 48 ஆயிரம் ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை. உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளிலும் 15 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது
-
Feb 25, 2025 17:31 IST
தற்காலிக பணியாளர்களை நீக்க வேண்டும்; தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
கடந்த 2020ம் ஆண்டுக்கு பிறகு தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்க வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது குறித்து மார்ச் 17ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
Feb 25, 2025 17:24 IST
சோதனை இல்லை; வருமான வரி பிடித்தம் தொடர்பான வழக்கமான சரிபார்ப்புதான் நடக்கிறது - தமிழ்நாடு மின் வாரியம் விளக்கம்
தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரி சோதனையும் நடைபெறவில்லை. வருமான வரி பிடித்தம் (TDS) தொடர்பான வழக்கமான சரிபார்ப்புதான் நடக்கிறது என தமிழ்நாடு மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது
-
Feb 25, 2025 16:58 IST
அண்ணா பல்கலை. வழக்கு - நீதிமன்றம் மாற்றம்
அண்ணா பல்கலை. விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருந்து மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
Feb 25, 2025 16:56 IST
5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
Feb 25, 2025 15:55 IST
அனைத்துக்கட்சி கூட்டம் - அதிமுக பங்கேற்குமா?
தமிழகத்தின் நாடாளுமன்ற தொகுதியை குறைக்க கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்பது குறித்து ஈபிஎஸ் முடிவு செய்வார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
-
Feb 25, 2025 15:54 IST
இந்தி எதிர்ப்பு போராட்ட வழக்கு ரத்து
திராவிடர் கழக துணைத்தலைவர் பூங்குன்றன் உள்ளிட்டோர் மீதான இந்தி எதிர்ப்பு போராட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. 2022ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்காக திராவிடர் கழகத்தினர் மீது பதியப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
-
Feb 25, 2025 15:54 IST
காங். முன்னாள் எம்.பி.,க்கு ஆயுள் தண்டனை
சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் தந்தை, மகனை கொன்ற வழக்கில் காங். முன்னாள் எம்பி சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1984ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
-
Feb 25, 2025 15:53 IST
திமுக, அதிமுக பேச தகுதியில்லை - சீமான்
மாநில உரிமைகள் பற்றி பேச திமுக, அதிமுகவுக்கு தகுதி இல்லை. 2 கட்சிகளும் ஆட்சியில் இருந்தபோதுதான் கல்வி மாநில பட்டியலில் இருந்து பொதுப்பிரிவுக்கு போனது. இந்திக்கும் எதிராக போராட அனுமதி தந்தால் நாங்களே போராடி தடுத்துவிடுவோம் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
-
Feb 25, 2025 15:18 IST
"திமுகவின் சாயம் வெளுக்க தொடங்கி விட்டது"
பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, ஏழை எளியவர்களுக்கு ஒரு நீதி என்ற திமுகவின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது. பெயிண்ட் டப்பாவுடன் சுற்றும் திமுகவினருக்கு, இந்தி எது? ஆங்கிலம் எது? என்பதை முதல்வர் விளக்கியிருக்கலாம். அரசு பள்ளி மாணவர்களுக்கு மும்மொழி கற்கும் வாய்ப்பை மறுப்பது ஏன்? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
-
Feb 25, 2025 15:09 IST
உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
வங்கதேசத்தில் உள்ள இந்து மதத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிடக்கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வெளியுறவு விவகாரங்களில் நீதிமன்றத்தால் தலையிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது தலைமை நீதிபதி அமர்வு.
-
Feb 25, 2025 14:58 IST
சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை வழக்கு - சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை!
டெல்லி சரஸ்வதி விகார் பகுதியில் 1984ல் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-
Feb 25, 2025 14:50 IST
மழையால் டாஸ் தாமதம்
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2:30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ள 7-வது லீக்கில் 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், மைதானத்தில் மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
-
Feb 25, 2025 14:40 IST
மார்ச் 12-ல் புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் - சபாநாயகர் செல்வம் அறிவிப்பு
புதுச்சேரியில் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மார்ச் 12-ம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்வார் என சபாநாயகர் செல்வம் அறிவித்துள்ளார். மார்ச் 10-ம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை கூடுகிறது.
-
Feb 25, 2025 14:11 IST
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பிப்.28-ல் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
-
Feb 25, 2025 14:09 IST
ரஜினி திருமண நாள் - சிறப்பு அபிஷேக ஆராதனை
நடிகர் ரஜினிகாந்த் திருமண நாளையொட்டி, வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இந்நிகழ்வில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி கலந்து கொண்டார். கோவில் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது
-
Feb 25, 2025 13:38 IST
தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது- ஜெயக்குமார் பேச்சு
தமிழ்நாட்டில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பதை அதிமுக ஏற்றுக்கொள்ளாது. மாநில உரிமைகளை எந்த சூழ்நிலையிலும் ஒன்றிய அரசு பறிக்கக் கூடாது. மக்களை வஞ்சிக்கும் வகையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் நிச்சயம் தமிழ்நாட்டு ஏற்காது. மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கு தொகுதி குறைப்பு தண்டனையா? என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
-
Feb 25, 2025 13:22 IST
லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவும் தி.மு.க அரசுக்கு கண்டனம் - இ.பி.எஸ் அறிக்கை
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் திரு. அம்மன் அர்ஜுனன் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை ஏவியுள்ள மு.க ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இன்றைக்கு தமிழ்நாட்டில் நடக்கும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே இல்லை. நாடறிந்த "ஊழல் திலகங்களான" இவர்கள், நாட்டில் நடக்கும் பிரச்சனைகளையும், அதனை சரிசெய்ய வக்கில்லாத தங்கள் நிர்வாகத் திறமையின்மையையும் மறைக்க, திசைதிருப்ப ஏவும் ஆயுதங்களில் ஒன்றாக மாறிவிட்டது "லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை".
அதிலும், கடந்த சில வாரங்களாக ஊர் ஊராக செல்லும் முதல்வர் மு.க ஸ்டாலின், தான் நடத்தும் காட்டாட்சிக்கு மக்களிடையே இருக்கும் பெரும் வெறுப்பையும், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற மக்களின் ஒருமித்த எண்ணத்தையும் உணர்ந்ததன் Knee Jerk Reaction தான் நம் கழக சட்டமன்ற உறுப்பினர் மீது எவப்பட்டுள்ள இந்த சோதனை.
இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக உள்ள அன்புச் சகோதரர் திரு. அம்மன் K. அர்ச்சுனன் அவர்களை திறம்பட செய்து வரும் கழகப்பணியை தடுக்கும் விதமாக , லஞ்ச ஒழிப்பு துறை சோதனையை செய்வது வெட்கக்கேடானது,
தீயசக்தி திமுக தெரிந்து கொள்ளட்டும், இன்னும் எங்களை எதிர்த்து எதுவரினும்,எவர்வரினும் துஞ்சாது எதிர்கொள்வோம்! 2026-ல் வெல்வோம்! நல்லாட்சி அமைப்போம்!" என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
Feb 25, 2025 13:08 IST
மார்ச் 5-ல் அனைத்துக்கட்சி கூட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு
மார்ச் 5-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். “தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டம். தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகள் குறைக்கப்படும் அபாயம். தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக விவாதிக்க, பதிவு செய்யப்பட்டுள்ள 40 கட்சிகளுக்கு அழைப்பு.மிகப்பெரிய உரிமை மீட்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ள்ளார்.
-
Feb 25, 2025 11:46 IST
மும்மொழி கொள்கை திணிப்பு - பா.ஜ.க நிர்வாகி விலகல்
மும்மொழிக் கொள்கை திணிப்பு மற்றும் திராவிடம் மீதான வெறுப்பைக் கண்டித்து பா.ஜ.க மாநில நிர்வாகியான ரஞ்சனா, அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
-
Feb 25, 2025 11:43 IST
தகவல் தரவு மையம் திறப்பு
சென்னையில், தகவல் தரவு மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ. 4,000 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்ட இதன் மூலம், சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பத்தூரில் அமைந்துள்ள சென்னை தகவல் தரவு மையத்தை காணொளி காட்சி வாயிலாக ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
Feb 25, 2025 10:56 IST
சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டம் என தகவல்
சென்னை, நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பேரில், தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த 10 பேரை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Feb 25, 2025 10:37 IST
மத்திய அரசிடம் ஈகோ பார்க்கும் தமிழ்நாடு அரசு - தமிழிசை
மத்திய அரசிடம், தமிழ்நாடு அரசு ஈகோ பார்க்கிறது என தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், "தங்கள் குழந்தைகளை இந்தி படிக்க வைத்து விட்டு, பொது இடங்களில் இந்தி எழுத்துகளை அழிக்கின்றனர். இந்தி இல்லாவிட்டால் வெளிமாநிலத்தவர் ஊர் பெயர்களை எப்படி புரிந்து கொள்வார்கள்? ஆங்கிலத்தை வளர்ப்பார்களே தவிர இன்னொரு இந்திய மொழியை வளர்க்க மாட்டார்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.
-
Feb 25, 2025 09:51 IST
இருமொழிக் கொள்கையால் தான் தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி - ஸ்டாலின்
இருமொழிக் கொள்கையை கடைபிடிப்பதால் தான் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்தது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், "எந்த மொழிக்கும் நாம் எதிரி இல்லை. யார், எந்த மொழியை கற்கவும் தடையாக நிற்பதில்லை. ஆனால், ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை அதற்கு எதிரான போராட்டம் தொடரும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Feb 25, 2025 09:26 IST
தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை
சென்னை, நந்தனத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிறுவனத்தில் வரி ஏய்ப்பு நடந்ததாக கூறப்படி நிலையில், தற்போது சோதனை நடத்தப்படுகிறது.
-
Feb 25, 2025 08:58 IST
நன்றி கெட்டவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் - ஓ.பி.எஸ்
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கருவாடு மீனாகாது, கறந்தபால் மடிபுகாது, நயவஞ்சகம் வெற்றி பெறாது. ஆணவ செருக்குடைய நயவஞ்சகர்களை அகற்றாவிட்டால், அ.தி.மு.க வீழ்ச்சியை தடுக்க முடியாது. துரோகம் நிச்சயம் வீழும், நய வஞ்சகம் நசுக்கப்படும், நன்றி கெட்டவர்கள் தூக்கி எறியப்படுவார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
Feb 25, 2025 07:39 IST
சுரங்க மீட்பு பணியில் முன்னேற்றம் இல்லை என தகவல்
தெலங்கானாவில் சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலாளர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை தொடர்வதாக கூறப்படுகிறது. நான்காவது நாளாக நடைபெறும் மீட்பு பணியில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும், அதிநவீன ரோபோடிக் கேமராக்கள் மூலம் தேடும் பணி தீவிரமாக நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Feb 25, 2025 07:34 IST
தமிழ்நாடு முழுவதும் இன்று ஜாக்டோ ஜியோ போராட்டம்
தமிழ்நாடு முழுவதும் இன்று ஜாக்டோ ஜியோ சார்பில் போராட்டம் நடத்தப்படவுள்ளது. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட ஆலோசனையில் இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில், அரசு ஊழியர்கள் திட்டமிட்டபடி இன்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தவுள்ளனர்.
-
Feb 25, 2025 07:22 IST
இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இதில், தமிழ்நாடு பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கு ஒப்புதல் வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.